பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 1, 2013

பிறவி மர்மங்கள்: 12 (உண்மை நிகழ்வுகள்)


கேத்தரினுக்கு முதன்முதலாக ஹிப்னாடிச சிகிச்சையை துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிவிட்டன. கேத்தரினிடம் நோயின் சுவடே இல்லாமல் போனது மட்டுமல்லாமல், அவளுடைய அமைதியும், தேஜசும் அதிகரித்தது. அவளை அறியாமலேயே அவளைச் சுற்றியுள்ளவர்களை அவள் கவர்ந்தாள். பல வருடங்களாக அவள் மருத்துவமனை கேன்டீனில் தன் காலை உணவை உண்கிறாள். அவளை யாரும் அவ்வளவாக கவனித்தது கிடையாது. ஆனால், இப்பொழுதெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் கூட அவளிடம் பேச விழைகிறார்கள். ஆண்களும், பெண்களும் விரும்பிப் பேசுகிறார்கள். “உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.” என்று கூறியிருக்கிறார்கள். கேத்தரினைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றி இருப்பதைப் போன்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  
எப்பொழுதும்போல கேத்தரின் மிக விரைவில் சமாதி நிலைக்குச் சென்று விட்டாள். “கற்களாலான ஒரு கட்டிடத்தைக் காண்கிறேன். . . . . . அதன் கூரையில் கூரான கம்பிபோல் ஏதோ உள்ளது. சுற்றிலும் மலைபிரதேசமாக உள்ளது. ஈரம் . . . . . வெளியே ஈரமாக உள்ளது. பொருட்களை எடுத்துச் செல்லும் ஊர்தி உள்ளது. அதில் வைக்கோல், விலங்குகள் உண்ணும் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. சில ஆடவர்களைப் பார்க்கிறேன். பேனர் உள்ள கொடியை ஏற்றியுள்ளார்கள். “மூர்ஸ்” “மூர்ஸ்” என்று பேசிக்கொள்கிறார்கள். ஏதோ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. உலோகத்தாலான தலைகவசம் அணிந்திருக்கிறார்கள். . . . . . ஏதோ ஒரு வகையான தலைகவசம். . . . . . வருடம் 1483. டான்ஸ் என்ற இடத்தில் ஏதோ நிகழ்கிறது. ஏதோ யுத்தம் நடக்கிறது.”
“நீயும் அங்கு இருக்கிறாயா?” வினவினேன்.
“இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களை எடுத்துச் செல்லும் ஊர்திகளைக் காண்கிறேன். அதன் பின்புறம் திறந்ததாக உள்ளது. ஊர்தியின் பக்கங்கள் மரப்பலகையில் செய்யப் பட்டுள்ளது. அவர்கள் கழுத்தில் உலோகத்தில் செய்யப்பட்ட ஒன்றை அணிந்திருக்கிறார்கள். சிலுவைபோல் உள்ளது. மிகவும் கனமாக உள்ளது. சிலுவையின் ஓரங்கள் வளைந்துள்ளது. பெரிய கத்திகளைப் பார்க்கிறேன். ஒருவகையான வாள் . . . . . . . கத்திபோல் தோன்றுகிறது. அதன் முனை மழுங்கியுள்ளது. அவர்கள் யுத்தத்திற்குத் தயாராகி கொண்டிருக்கிறார்கள்.
“உன்னைக் காண முடிகிறதா? சுற்றிப் பார். நீயும் ஒரு இராணுவ வீரனாக இருக்கக்கூடும். நீ அங்கிருந்துதான் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா?”
“நான் இராணுவ வீரன் இல்லை.” உறுதியாக பதிலளித்தாள்.
“சுற்றிலும் நோக்கு.”
“நான் அவர்களுக்காக பொருட்களை கொண்டு வந்திருக்கிறேன். இது ஒரு கிராமம்.” அமைதியானாள்.
“இப்பொழுது என்ன பார்க்க முடிகிறது?”
“ஒரு கொடி. . . . . .ஒரு வகையான கொடி. வெண்மையும் சிவப்பு நிறமும் அதில் தெரிகிறது. வெண்மையான கொடியில், சிவப்பு நிற சிலுவை உள்ளது.”
“அந்த கொடி மக்களைச் சேர்ந்ததா?”
“அரசரைச் சேர்ந்த, ராணுவ வீரர்களின் கொடி அது.”
“உங்கள் அரசரா?”
“ஆமாம்”
“அரசரின் பெயர் என்ன?”
“தெரியவில்லை. அரசர் இங்கு இல்லை.”
“நீ என்ன மாதிரியான உடை அணிந்திருக்கிறாய்?”
“விலங்கின் தோலினால் செய்யப்பட்ட உடை. சட்டை மிகவும் சிறியதாக உள்ளது. மிருதுத்தன்மையில்லாத சட்டை. தோலிலாலான காலணியும் அணிந்திருக்கிறேன். என்னிடம் யாரும் பேசவில்லை.”
“புரிகிறது. உன் கூந்தலின் நிறமென்ன?”
“என் கூந்தல் வெளுத்துவிட்டது. எனக்கு வயதாகிவிட்டது.”
“இந்த யுத்ததைப்பற்றி என்ன நினைக்கிறாய்?”
“யுத்தமே இங்கு வாழ்வாகிவிட்டது. என்னுடைய ஒரு குழந்தையை சென்ற யுத்தத்தில் இழந்துவிட்டேன்.”
“மகனையா?”
“ஆமாம்” வருத்தத்துடன் கூறினாள்.
“உனக்கு இப்பொழுது யாரிருக்கிறார்கள்? உன் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?”
“என் மனைவியும் . . . . என் மகளும்”
“உன் மகளுடைய பெயரென்ன?”
“தெரியவில்லை. . . . அவள் என் நினைவிலிருக்கிறாள். என் மனைவியைப் பார்க்கிறேன்.” கேத்தரின் ஆணாகவும், பெண்ணாகவும் வேறு வேறு பிறவிகளில் இருந்திருக்கிறாள். நிகழ்கால பிறவியில் இன்னும் குழந்தையில்லாமல் இருக்கிறாள். ஆனால் நிறைய குழந்தைகளுக்கு பெற்றோராக முற்பிறவிகளில் இருந்திருக்கிறாள்.
“உன் மனைவி பார்ப்பதற்கு எப்படி இருக்கிறாள்?”
“அவளுக்கு வயதாகிவிட்டது. மிகவும் களைப்பாக இருக்கிறாள். எங்களிடம் ஆடுகள் உள்ளன.”
“உன் மகள் உங்களுடன் வசிக்கிறாளா?”
“இல்லை. அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. தனியாக சென்றுவிட்டாள்.”
“நீயும் உன் மனைவியும் தனியாக வசிக்கிறீர்களா?”
“ஆமாம்”
“உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?”
“மிகவும் சோர்ந்துவிட்டோம். நாங்கள் ஏழைகள். வாழ்க்கை எளிதாக இல்லை.”
“உன் மகனை இழந்துவிட்டாயே, அவன் பிரிவை உணர்கிறாயா?”
“ஆமாம்” அவள் குரலில் சோகம் தோய்ந்திருந்தது.
“நீ விவசாயம் செய்கிறாயா?” பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றினேன்.
“ஆமாம். கோதுமை. . . . கோதுமை போன்ற தானியத்தை பயிரிடுவோம்.”
“உங்கள் இடத்தில், உன் வாழ்க்கையில் பல யுத்தங்களை பார்வையிட நேர்ந்துள்ளதா?”
“ஆமாம்”
“ஆனால் உன்னால் முதுமைவரை வாழ முடிந்துள்ளதே?”
“அவர்கள் கிராமத்துக்கு தூரத்தில்தான் போரிடுவார்கள். கிராமத்திலேயே போரிடமாட்டார்கள். பல மைல்களுக்கு அப்பால் போரிடுவார்கள்.” விளக்கமளித்தாள்.
“நீ வசிக்கும் ஊரின் பெயர் தெரிகிறதா?”
“பெயரை எங்கும் பார்க்க முடியவில்லை. ஏதாவது ஒரு பெயர் இருக்க வேண்டும்.”
“உனக்கு மத நம்பிக்கை உள்ளதா? சிப்பாய்கள் சிலுவைகள் அணிந்திருக்கிறார்களா?”
“எல்லோரும் மத நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு மத நம்பிக்கையில்லை.”
“உன் மனைவி, மகளைத்தவிர வேறு யாரும் உன் குடும்பத்தில் இருக்கின்றனரா?”
“இல்லை”
“உன் பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள்?”
“பெற்றோர்கள் இறந்துவிட்டனர். ஒரு சகோதரி இருக்கிறாள். ஆனால் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை.”
“சரி. உன் கிராமத்தில் வேறு யாரையாவது அடையாளம் காணமுடிகிறதா என்று கவனி.” மக்கள் குழுக்களாக பிறவியெடுத்திருந்தால் அவள், தன்னுடைய நிகழ்கால பிறவியில் தெரிந்தவர்கள் யாரையேனும் அங்கு அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
“நான் ஒரு கல் மேஜையைக் காண்கிறேன். . . . . சில கோப்பைகளும் உள்ளன”
“அது உன்னுடைய இல்லமா?”
“ஆமாம். சோளத்தில் செய்யப்பட்டுள்ள உணவு. மஞ்சள் நிறத்தில் உள்ளது. . . . . . . இதைத்தான் உண்கிறோம்.”
“சரி. இது உனக்கு மிகவும் கடினமான வாழ்க்கையாக உள்ளது. கடினமாக வாழ்க்கை. . . . . . இப்பொழுது என்ன சிந்தனை செய்கிறாய்?”
“குதிரைகள்.” முணகினாள்.
“உன்னிடம் குதிரைகள் உள்ளனவா? அல்லது அடுத்தவர்களுடைய குதிரையா?”
“இல்லை. . . . . . சிப்பாய்களுடையது. அவை எப்பொழுதும் நடக்கின்றன. ஆனால் அவை குதிரைகள் அல்ல. கழுதைகள் போன்று உள்ளது. குதிரைகளைவிட சிறிய அளவில் உள்ளது. எப்பொழுதும் முரட்டுத்தனத்துடன் காணப்படுகிறது.”
“காலத்தில் முன்னோக்கிச் செல். உன் வாழ்க்கையின் இறுதி நாட்களுக்குச் செல்.” ஆணையிட்டேன்.
“ஆனால் எனக்கு இன்னும் வயதாகிவிடவில்லை.” என் ஆணையை மறுத்தாள். இதுவரை அவள் அப்படி மறுத்ததில்லை. ஆனால் இப்பொழுது மறுக்கிறாள்.
“இந்த பிறவியில் முக்கியமான நிகழ்ச்சி எதுவும் உள்ளதா? அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ளதா?” என்னுடைய வழிமுறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை.” எந்த வித உணர்ச்சியுமின்றி பதிலளித்தாள்.
“அப்படியென்றால் முன்னோக்கிச் செல். நான் கற்றுக்கொள்வதற்கு விஷயம் எதுவும் உள்ளதா என்று பார்க்கலாம். உனக்குப் புரிகிறதா?”
“இல்லை. நான் இங்கேயே இருக்கிறேன்.”
“சரி அங்கு என்ன காண்கிறாய்?” அவளிடமிருந்து பதில் வருவதற்கு சில நிமிடங்கள் ஆனது.
“நான் மிதக்கிறேன்.” மென்மையாக முணகினாள்.
“அந்த பிறவி முடிந்துவிட்டதா?”
“ஆமாம். நான் மிதக்கிறேன்.” மீண்டும் ஸ்தூல நிலையை அடைந்திருக்கிறாள்.
“முடிந்த பிறவியிலிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டுமென்று உனக்குத் தெரியுமா? மீண்டும் ஒரு கடினமான பிறப்பைக் கடந்திருக்கிறாய்.”
“தெரியவில்லை. நான் மிதக்கிறேன்.
“சரி. ஓய்வெடுத்துக்கொள். . . . . . ஓய்வெடுத்துக்கொள்.” நிமிடங்கள் கழிந்தன. அவள் எதையோ உற்று கவனிப்பதுபோல் தோன்றியது. திடீரென்று பேச ஆரம்பித்தாள். மிகவும் சத்தமாகவும், ஆழ்ந்த குரலிலும் பேசினாள். பேசியது கேத்தரின் கிடையாது என்பதை உணர்ந்தேன்.
“மொத்தத்தில் ஏழு பரிமாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பரிமாணத்திலும் பல்வேறு நிலைகள் உள்ளன. ஒரு பரிமாணத்தில் உன்னுடைய பழைய நினைவுகளைத் தட்டியெழுப்பமுடியும். அந்த பரிமாணத்தில் உன்னுடைய முடிந்துபோன பிறவியைக் காணமுடியும். மேலும், பரிமாணத்தில் உள்ள மேல்நிலைகளில் நமக்கு நிகழ்ந்தவைகளை மீண்டும் பார்த்துக்கொள்ள அனுமதி உண்டு. அதனால் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.  ஆனால் கீழ்நிலையில் உள்ள பரிமாணத்தில் எங்களால் தற்போதைய வாழ்வை பரிசீலிக்க மட்டுமே அனுமதி உண்டு. . . . . . . இப்பொழுது அந்த நிலை முடிந்துள்ளது.”
“நாம் பிறவி கடனைக் கழித்தாக வேண்டும். இந்த பிறவியில் தீராத கடனை வேறொரு பிறவிக்கும் எடுத்துச் செல்ல நேரிடும். . . . . . முடிவில் கடனை கழித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. பிறவி கடனைக் கழிப்பதால் நம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். சரீர நிலையில் உள்ளபொழுது அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். . . . . . அந்த முயற்சிகள் பலன் தராத பட்சத்தில் . . . . . தடையேதும் ஏற்பட்டால் . . . . . .மீண்டும் நினைவுகளை அசைபோடும் நிலைக்கு அனுப்பப்படுவோம். அங்கிருந்து மீண்டும் சரீர நிலைக்குத் திரும்ப அனுமதி கிடைக்கும். எப்பொழுது பிறவி எடுக்க வேண்டுமென்று நீதான் முடிவு செய்ய வேண்டும். எப்படி கடனை கழிக்க வேண்டுமென்றும் என்றும் நீதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் பழைய பிறவிகள் நினைவில் நிற்காது. . . . . . . எந்த பிறவியில் இருக்கிறோமோ அந்த நினைவுகள் மட்டுமே தொடரும். மேல்நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு, துறவிகளுக்கு . . . . . பழைய நினைவுகளைக் காண அனுமதி உண்டு. . . . . . நமக்கு உதவி செய்யவும் கற்பிப்பதற்காகவும் அவர்களுக்கு அந்த அனுமதி கிடைக்கிறது.
ஒரு பிறவியில் இருந்து மறுபிறவி எடுப்பதற்குள் ஏழு பரிமாணங்களைக் கடந்தாக வேண்டும். அங்கு ஒரு நிலையில் நமது முடிந்துபோன பிறவியின் நினைவுகளைக் காண அனுமதி உண்டு. அங்கு காத்திருக்கவேண்டும். வரப்போகும் பிறவிக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று அங்குதான் முடிவு செய்யப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக தீயகுணம் உண்டு. பொறாமை, பேராசை எதுவாகவும் இருக்கலாம். நாம் அத்தகைய தீயகுணத்தை வரும் பிறவியில் சரிசெய்ய வேண்டும். அப்படி சரிசெய்யாத பட்சத்தில், அந்த தீயகுணத்தையும், வேறு தீய குணங்களையும் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்ல நேரிடும். ஒருவருடைய சுமை அதிகமாகிக் கொண்டே செல்ல வாய்ப்புகள் உள்ளது. சரிசெய்யாதவர்களுக்கு அடுத்த பிறவி இன்னும் சிரமமானதாக இருக்கும். சரி செய்தவர்களுக்கு மறுவாழ்வில் சிரமம் அதிகம் இருக்காது. எனவே உன் எதிர்கால வாழ்வை தேர்ந்தெடுப்பது உன் கையில்தான் உள்ளது. உன் வாழ்க்கையின் பொறுப்பு உன்னிடமே உள்ளது. நீயே தேர்ந்தெடுக்கிறாய்.” கேத்தரின் அமைதியானாள்.
இந்த விளக்கம், நிச்சயம் வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து கிடைக்கவில்லை. பதிலுரைத்த ஆன்மா, தன்னை கீழ்நிலையிலுள்ள ஆன்மா என்று கூறிக்கொண்டது. மேல்நிலையில் உள்ளவர்களை துறவிகள், முனிவர்கள் நிலை என்றும் கூறியது. ஏழு பரிமாணங்களில், பல்வேறுபட்ட நிலைகள். . . . . . நான் வியப்புக்குள்ளானேன். பல்வேறு பரிமாணங்களில் இருந்தும் அறிவுரைகள் கிடைப்பதை உணர்ந்தேன். அறிவுரைகள் வேறு வேறு பரிமாணத்தில் இருந்து கிடைத்தாலும், அதன் சாராம்சம் ஒன்றாக இருப்பதையும் உணர்ந்தேன். விளக்கம் கொடுக்கப்படும் முறை, இலக்கணம், வார்த்தைகள் போன்றவைகள் மாறினாலும் கொள்கைகள் ஒன்றாக இருப்பது புரிந்தது. எனக்கு முறையாக ஆன்மீக அறிவு புகட்டப்படுகிறது. அன்பு, பற்று, நம்பிக்கை மற்றும் ஈகை போன்ற உன்னதமான பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியதை இந்த விளக்கங்கள் அறிவுறுத்துகின்றன. தீய குணங்களையும் அதனால் நாம் அடுத்தவர்களுக்கும், நமக்கும் கடன்பட்டிருப்பதையும் சோதனை செய்கிறது. கடந்தகால நினைவுகளை ஸ்தூல நிலையில் அசைபோடுவதையும் குறிப்பிடுகிறது. அன்பு, ஞானம், இணக்கமான பண்பு போன்றவைகளால் நமது ஆன்மா இறைவனை நோக்கி முன்னோக்கிச் செல்ல முடியும் என்றும் வலியுறுத்துகிறது.
செயல்படுத்தக்கூடிய அறிவுரைகளை வழியெங்கும் கூறிச்செல்வது நன்கு புலனாகிறது. பொறுமை, காத்திருக்கும் பண்பு, இயற்கைச் சமநிலை, மரணபயத்தை நீக்குதல், நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல், மன்னிக்கும் மனப்பான்மை, அடுத்தவர்களை மதிப்பீடு செய்யாமை, சக மனிதர்களின் உயிரைப் பறிக்க அனுமதி கிடையாதென்ற உண்மை, நம்முடைய உள்ளுணர்வுகளின் சக்தி, அனைத்துக்கும் மேலாக நமது ஆன்மா அழிவற்றது என்ற உண்மை என்று ஏகப்பட்ட அறிவுரைகள் வழிநெடுகிலும் நமக்குக் கிடைக்கிறது. நாம் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவர்கள். காலத்தையும், வெளியையும் கடந்தவர்கள். நாமே இறைவனுடன் இறைவனாக ஒன்றி விடுகிறோம்.
---தொடரும்.
ஒரு உபயோகமுள்ள இணையதளம்:
அநேகருக்கு இந்த தளம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கக்கூடும் என்று எண்ணி இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறேன். இந்த தளத்தை உபயோகிக்கும் சாத்தியம் இல்லாமல் இருந்தால் மிகவும் நல்லது. தேவைப்பட்டால் உபயோகப்படுத்துங்கள்.
பொதுவாக மருத்துவர்களிடம் செல்பவர்கள், சற்று கவலைதரும் நோயை மருத்துவர் தெரிவித்தால், இன்னொரு மருத்துவரின் கருத்தை நாடுவது வழக்கம். தற்கால சூழலில் குடும்பத்திலோ, நட்பு வட்டத்திலோ மருத்துவர்கள் இல்லாதபட்சத்தில், எந்த மருத்துவரையும் நம்புவது கடினமாக உள்ளது. நான் ஆபத்பாந்தவனாக நினைப்பது இந்த இணையதளம். பொதுவாக அனைவராலும் தனது உடலில்  ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் உணரமுடியும். இந்த தளத்தில் சென்று, அந்த மாற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளமுடியும். மாற்றங்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாற்றங்கள் இயற்கையான மாற்றங்களாகக் கூட இருக்கலாம். அல்லது ஏதாவது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த இணைய தளத்தில், ஒருவர் மருத்துவரிடம் செல்லுன் முன், தங்களுடைய பிரச்சனைகளைப்பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
நோயின் காரணங்கள், நோயினால் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள், நோயைக்கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், நோய்க்கான அறிகுறிகள், மருத்துவரிடம் செல்லும் முன் செய்யவேண்டிய காரியங்கள், மருத்துவர் செய்யக்கூடிய சிகிச்சைகள், சிகிச்சைக்குப்பிறகு என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது, மருத்துவர் பரிந்துரைக்கக்கூடிய மருந்துகள் அவற்றின் பக்கவிளைவுகள் என்று ஆக மொத்தத்தில் அனைத்து விபரங்களையும் விரிவாகவும், விளக்கமாகவும் இந்த தளம் தந்துவிடுகிறது. மேலும் ஒரே வகையான அறிகுறிகள் வேறு வேறு நோய்களுக்கும் தோன்றலாம். இந்த தளத்தில் பல வகைப்பட்ட அறிகுறிகள் கேள்விகளைக் கேட்டு எந்த நோய் என்று நம்மால் ஓரளவுக்கு யூகிக்கக்கூடிய அளவில் கேள்விகள் தரப்பட்டுள்ளது.
இது ஒரு மருத்துவ தளம். அத்தாட்சி பெற்ற மருத்துவர்களால் எழுதப்பட்ட தளம். எனவே மருத்துவரை நம்பும் அளவுக்கு இந்த இணைய தளத்தை நம்பலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் படித்து தெரிந்துகொள்பவர்கள், நன்கு ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களாக இருக்கவேண்டும்.
ஒரு சிலருக்கு எந்த நோயைப்பற்றி தெரிந்துகொண்டாலும், அதற்கான அறிகுறிகள் தம்மிடம் இருப்பதுபோல் உணர்வார்கள். அத்தகைய எண்ணம் கொண்டவர்கள், இந்த தளத்தைப்பார்த்து பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உள்ளது. உண்மையாகவே ஒருவருக்கு, ஆராயும் மனப்பாங்கு இருந்தால் இந்த தளம் மிகவும் உபயோகப்படும். எப்படியிருப்பினும், உண்மையான ஒரு மருத்துவரின் சேவைக்கு முன் இந்த இணைய தளம் ஈடாகாது. எனினும் இன்றைய சூழலில் நம்மைப்பற்றி நாம் நன்கறிந்து கொள்வது நல்லது.
ஒருவருக்கு அறிகுறிகள் மட்டும் தெரிந்தால் முதலில் “symptom checker“ – க்கு செல்லுங்கள். படிப்படியாக படித்து மேலே செல்லுங்கள். நோயின் பெயர் உறுதியாகத் தெரிந்தால் அதற்கான தகவலைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஏதாவது ஒரு அறிகுறியை எடுத்துக்கொண்டு தளத்தை சுற்றிப்பாருங்கள். தளம் உண்மையில் தேவைப்படாமல் இருப்பதற்கு எனது பிரார்த்தனைகள்.
துணுக்கு:
ஒருவருடைய நாய்க்கு உடம்பு சரியில்லாமல் செருமிக்கொண்டே இருந்தது. அவருடைய நண்பரின் நாய்க்கும் அதே பிரச்சனையிருந்து, அதற்கு அந்த நண்பர் ஏதோ மருந்து செய்து கொடுத்தது அவரின் நினைவுக்கு வந்தது. அவர் அந்த நண்பரிடம் என்ன மருந்து கொடுத்தார் என்று கேட்டார். நண்பரும் உப்பு, மிளகு, திப்பிலி என்று ஏதோ அரைத்து கொடுத்ததாக கூறினார்.
உடனே இவர், நண்பரிடம் அந்த மருந்தை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரும் சிரத்தையுடன் மருந்து கொண்டுவந்து கொடுத்தார். எத்தனை நாட்கள் நாய்க்கு மருந்து கொடுத்தார் என்று கேட்டதற்கு மற்றவரும் மூன்று நாட்கள் கொடுத்ததாகக் கூறினார். மூன்று நாட்களுக்குப்பிறகு அந்த நாய் செத்துவிட்டது. பிறகு நடந்த உரையாடல்கள் கீழே.
“டேய், இங்க வா.”
“என்னண்ணே?”
“மருந்து நல்லா செஞ்சு கொடுத்தியா?”
“ஆமண்ணே”
“என் நாய் செத்துபோச்சேடா?”
“என் நாயும்தாண்ணே செத்துபோச்சு.”
“ஏன்டா, இத முன்னாடியே சொல்லி தொலைக்கக்கூடாது?”
“நீங்க கேக்கலியண்ணே.”

16 comments:

  1. பரிமாணத்தில் உன்னுடைய முடிந்துபோன பிறவியைக் காணமுடியும்.//எனக்கும் விருப்பம்தான் உதவ முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு. கவியாழி கண்ணதாசன்.

      வழிகாட்டி ஆன்மாவின் கூற்றுப்படி, குறிப்பிட்ட பரிமாணத்தில் மட்டுமே முடிந்துபோன பிறவியைக் காண முடியும். மனிதப் பிறவியில் சில துறவிகளுக்கு மட்டுமே அத்தகைய சக்தி இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. சாதாரண மனிதர்களுக்கு அது தேவையில்லாதது என்பது என் கருத்து.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. // உன் எதிர்கால வாழ்வை தேர்ந்தெடுப்பது உன் கையில்தான் உள்ளது. உன் வாழ்க்கையின் பொறுப்பு உன்னிடமே உள்ளது. நீயே தேர்ந்தெடுக்கிறாய்... //

    செயல்படுத்தக்கூடிய அறிவுரைகள் தான்...

    நல்லதொரு தள இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. நானும் இந்த புத்தகத்தை விரும்பி படித்தேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இடிக்கிறது. ஹிப்னாடிக் ட்ரான்ஸ்-ல் இருக்கும் போது ஒருவருக்கு அவருடைய வாழ்வில் நடந்தந்து மட்டும் தானே ஞாபகம் இருக்க வேண்டும். ஆனால் கேத்தரின் ஒரு மீடியமாக செயல்பட்டு அவர் மற்றவர்கள் (மற்ற ஆவி??) போல் எப்படி பேச முடியும்??

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி மதிப்புக்குரிய ACE, அவர்களே! ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் டாக்டர்.வைஸ், கேத்தரின் வழியாக வழிகாட்டி ஆன்மாக்கள் அவருக்கு அறிவுரைகள் தருவதாகக் குறிப்பிடுகிறார். அவருக்காகவே வழிகாட்டி ஆன்மாக்கள் செய்திகள் தருவதாகவும் கூறுகிறார்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  4. //நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக தீயகுணம் உண்டு. பொறாமை, பேராசை எதுவாகவும் இருக்கலாம். நாம் அத்தகைய தீயகுணத்தை வரும் பிறவியில் சரிசெய்ய வேண்டும். அப்படி சரிசெய்யாத பட்சத்தில், அந்த தீயகுணத்தையும், வேறு தீய குணங்களையும் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்ல நேரிடும். ஒருவருடைய சுமை அதிகமாகிக் கொண்டே செல்ல வாய்ப்புகள் உள்ளது. சரிசெய்யாதவர்களுக்கு அடுத்த பிறவி இன்னும் சிரமமானதாக இருக்கும். சரி செய்தவர்களுக்கு மறுவாழ்வில் சிரமம் அதிகம் இருக்காது.//

    இது உண்மையோ என்ற எண்ணம் எனக்கு வந்ததுண்டு. ஆனால் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் இன்னும் பல நடத்தி ஒருமித்த முடிவு வரும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    நீங்கள் தந்துள்ள இணையதளம் எல்லோருக்கும் உபயோகமான தளம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    கடைசியில் தந்துள்ள இணைப்பு நகைச்சுவைக்குத் தான் என்றாலும், எப்படி மற்றவர்கள் செய்வதை அதனுடைய சாதக பாதகத்தை அறியாமல் அப்படியே நாம் கண்மூடித்தனமாக செய்கிறோம் என்ற பாடத்தை சொல்லாமல் சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      என் மகனுக்கு நான்கு வயது நடக்கும்பொழுது, தன் அக்காவிடம் அதிகம் பொறாமைப்படுவான். அப்படி நினைக்கக் கூடாது என்றால், எனக்கு அப்படித்தான் நினைப்பு வருகிறது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அழுதது நினைவுக்கு வருகிறது. இதே குணம் எனக்கும் இருந்தது.
      எனவே சில தீய குணங்களும், நம்முடைய உதவி இல்லாமல் பிறப்பிலேயே வந்துவிடுகிறது என்று நம்புகிறேன். அது தீய குணம் என்று தெரிந்த பிறகு, அதனைத் தொடர்வது தவறு என்று கருதுகிறேன். இது சம்பந்தமாக வில்லியனூர் ராமச்சந்திரன் என்ற நியூரோசர்ஜனுடைய வீடியோக்களை நேரமிருந்தால் பார்க்கவும். தற்போதைய உலகில், முக்கியமான 100 விஞ்ஞானிகளில் அவர் ஒருவர். அறிவியல் சார்ந்து இதனைக் கண்டுபிடித்தால், நிறையபேர் குற்றத்திலிருந்து தப்பிக்கத்தான் இது உதவும் என்று நினைக்கிறேன்.

      ஆமாம். அடுத்தவருடைய அறிவுரையானாலும் ஒருவருடைய செயல்களுக்கான பலன்களையும் விளைவுகளையும் அவரேதான் அனுபவிக்க வேண்டும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. நீங்கள் எழுதிவரும் தொடர் ஒரு மொழிபெயர்ப்பு மாதிரியே படிப்பவர்களுக்கு தெரியாமல் செய்வதில் நீங்கள் மிக அருமையாக வெற்றிபெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    மயோ கிளினிக் தளம் மிகவும் பயனுள்ளது. அதை என் மூத்த மகள் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி அவர்களுடைய தினசரி மின்னஞ்சல் சேவையையும் என்னுடைய மின்னஞ்சலுக்கு வரும்படி செய்துக்கொடுத்தாள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ஐயா!
      இதுதான் எனது முதல் மொழிபெயர்ப்பு. இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது.

      ஆமாம். மிகவும் பயனுள்ள தளம். நிறைய விஷயங்களை மருத்துவர் உதவியில்லாமல் அறிந்துகொள்ள முடியும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  6. தகவலுக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete
  7. // அங்கு ஒரு நிலையில் நமது முடிந்துபோன பிறவியின் நினைவுகளைக் காண அனுமதி உண்டு. அங்கு காத்திருக்கவேண்டும். வரப்போகும் பிறவிக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று அங்குதான் முடிவு செய்யப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக தீயகுணம் உண்டு. பொறாமை, பேராசை எதுவாகவும் இருக்கலாம். நாம் அத்தகைய தீயகுணத்தை வரும் பிறவியில் சரிசெய்ய வேண்டும். அப்படி சரிசெய்யாத பட்சத்தில், அந்த தீயகுணத்தையும், வேறு தீய குணங்களையும் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்ல நேரிடும். ஒருவருடைய சுமை அதிகமாகிக் கொண்டே செல்ல வாய்ப்புகள் உள்ளது. சரிசெய்யாதவர்களுக்கு அடுத்த பிறவி இன்னும் சிரமமானதாக இருக்கும். சரி செய்தவர்களுக்கு மறுவாழ்வில் சிரமம் அதிகம் இருக்காது. எனவே உன் எதிர்கால வாழ்வை தேர்ந்தெடுப்பது உன் கையில்தான் உள்ளது. உன் வாழ்க்கையின் பொறுப்பு உன்னிடமே உள்ளது. நீயே தேர்ந்தெடுக்கிறாய்.” //

    அருமை. அதோடு எத்தனை உண்மை! நாம் இன்று கஷ்டப்படுகிறோம் எனப் புலம்பி என்ன பயன்! நம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு என்பது எத்தனை தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கிறது! ஆச்சரியமான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி. கீதா சாம்பசிவம்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  8. நகைச்சுவையாகவே இருந்தாலும் துணுக்கை என்னால் ரசிக்க இயலவில்லை. தளத்தின் சுட்டிக்கு நன்றி. இந்தத் தளத்துக்குச் செல்லும் அவசியம் ஏற்படாது என நம்புகிறேன். மேலே இருக்கிறவனை விட வேற் பாதுகாப்பு என்ன வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறும் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. கான்செப்டை மாற்றாமல் இடம், பொருளை நான் மாற்றியிருக்கலாம். இனிமேல் இப்படி இருப்பதை தவிர்க்கிறேன்.

      கெமிக்கலை சாப்பிட்டு, மன உளர்ச்ச்சியுடன் வாழ்கிறோம். கண்ட, கண்ட மருந்துகளையும் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இப்படிப்பட்ட தளங்களும் necessary evil ஆகிவிட்டது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  9. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். - குறள் எண்: 10

    என்ற குறளுக்கு முழு விளக்கமாகவே இந்த பதிவைப் பார்க்கின்றேன்.

    ReplyDelete