பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 2, 2013

பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 5 : பகுதி - 2


நான் என்னுடைய அலுவலக அறையில் இருந்தபடி கேத்தரின் இறுதியாக கூறியவைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நம்மை தோற்றுவித்தவன், அனைத்து மக்களையும் சமமாக படைக்கவில்லை. திறமைகள், சக்திகள் யாவையும் வேறு வேறு பிறவியிலிருந்து நாம் பெற்றிருக்கிறோம். “ஆனால் இறுதியாக நாம் அனைவரும் ஒரே அளவு ஆற்றலைப் பெற்று சமமாகி விடுவோம்.” இந்த நிலையை அடைவதற்கு அதிக ஜென்மங்கள் எடுக்கவேண்டும் என்று நான் யூகித்தேன்.

இசைக்கலைஞன் மொசார்ட், இளவயதிலேயே நம்பமுடியாத அளவுக்கு திறமைகளைப் பெற்றிருந்தான். அந்தத் திறமைகளும் முந்தைய பிறவிகளிலிருந்து தொடர்ந்திருக்குமா? நாம் திறமைகளை மட்டுமன்றி, பாவங்களையும் அடுத்த பிறவிகளுக்கு சுமக்க வேண்டியிருக்கிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது.

மக்கள் எப்பொழுதும் தத்தம் குழுவினரிடையே மட்டும், அதிக ஒட்டுதலுடன் இருப்பதைப் பற்றி சிந்தித்தேன். தம் குழு என்று கருதுபவர்களைத் தவிர்த்து, மக்கள் மற்றவர்களிடம் உண்மையான உணர்வுடன் பழகுவது கிடையாது. இத்தகைய குழு உணர்வு, துவக்கத்திலேயே மற்ற குழுக்களைப் பற்றிய தவறுதலான புரிந்துணர்வுகளுக்கு வித்தாகிறது. “நான் நம் சிந்தனை அலைவரிசைகளுக்கு ஒத்துவருபவர்களிடம் மட்டுமன்றி, ஒத்து வராதவர்களிடமும் பழகுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு உதவிகள் செய்ய வாய்ப்புகளும் உண்டு. இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கேத்தரினுடைய வார்த்தைகளிலிருந்த ஆன்மீக உண்மைகள் எனக்கு புரிய ஆரம்பித்தது.

“நான் திரும்பவேண்டும்” கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “நான் திரும்பியே ஆக வேண்டும்” நான் இன்னும் சில கேள்விகளைக் கேட்க விரும்பினேன். நான் ராபர்ட் ஜெராட் யாரென்று வினவினேன். சென்ற அமர்வின்பொழுது, கேத்தரின் ராபர்ட் ஜெராட்டுக்கு என் உதவி தேவைப்படுவதாகக் கூறி இருந்தாள்.

“எனக்குத் தெரியாது. . . . . . . . அவர் வேறொரு பரிமாணத்தில் இருந்திருக்கலாம். . . . . . . இங்கு இல்லை.” அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. “ அவர் விருப்பப்பட்டால், அவருக்குத் தேவைப்பட்டால் என்னைத் தேடி அவர் வரக்கூடும். எனக்குக் கிடைத்த தகவலின்படி அவருக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது.” கேத்தரின் முணகினாள்.

நான் ராபர்ட்டுக்கு எப்படி உதவமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை.

“எனக்குத் தெரியாது. நீங்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும். நான் கற்பதற்கு எதுவும் கிடையாது.”

விஷயம் விறுவிறுப்பான நிலைக்குச் சென்றது. செய்திகள் எனக்காக மட்டும் வந்தவைகளா? ராபர்ட்டுக்கு உதவி செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறேனா? ராபர்ட்டிடம் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை.

“நான் திரும்பிச் செல்ல வேண்டும்” மீண்டும் கூறினாள். “ஒளியை நோக்கிச் செல்ல வேண்டும்.” அவள் கலவரமடைந்தாள். “நான் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டேன். எனக்கு இன்னும் காத்திருக்க விருப்பமில்லை.” கேத்தரின் காத்திருக்கும் நேரத்தில் எதனைப் பார்க்க முடிகிறது, எதனை உணர முடிகிறது என்று வினவினேன்.

“என்னைப் போல நிறைய ஆன்மாக்கள் இங்கு காத்துக்கொண்டிருக்கின்றன.” கேத்தரின் பதிலளித்தாள். “காத்திருக்கும் நேரத்தில் நாம் கற்பதற்கு எதுவும் உள்ளதா” என்று கேட்டேன். “நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்று உன்னால் கூறமுடியுமா?” என்றும் வினவினேன்.

“என்னிடம் சொல்வதற்கு இங்கு யாரும் இல்லை.” கேத்தரினிடமிருந்து பதில் வந்தது. வழிகாட்டி ஆவிகள் இல்லாமல் கேத்தரினால் எந்தவித அறிவுரைகளையும் கூற இயலாது என்று திட்டவட்டமாக தெரிந்தது. சுவாரசியமான உண்மை.

“என்னால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை. எனக்குச் செல்லவேண்டும். . . . . . . .சரியான தருணம் வந்தவுடன் நான் சென்றுவிடுவேன்.” நிமிடங்கள் கழிந்தன. சரியான தருணம் வந்திருக்க வேண்டும். கேத்தரின் அடுத்த பிறவிக்குச் சென்றாள்.

“ஆப்பிள் மரங்களைப் பார்க்கிறேன். . . . . . . வீடு, வெண்ணிறவீடு. நான் அங்கே வசிக்கிறேன். ஆப்பிள் பழங்கள் அழுகிவிட்டன. . . . . புழுக்களும் உள்ளன. சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லை. மரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது.” நான் அவளைப் பற்றி விவரங்களைக் கேட்டேன்.

“என் தலைமுடி மஞ்சள் நிறமாக உள்ளது. எனக்கு ஐந்து வயதாகிறது. என் பெயர் கேத்தரின்.” நான் மிகவும் வியப்படைந்தேன். அவள் தற்போதைய பிறவிக்கு வந்திருக்கிறாள். அவள் ஐந்து வயது கேத்தரின் நிலைக்கு வந்திருக்கிறாள். அவள் அங்கு வந்ததற்கு ஏதேனும் காரணமிருக்க வேண்டும். “அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?” நான் வினவினேன்.

“என் தந்தை எங்களிடம் கோபமாக இருக்கிறார்..... நாங்கள் வெளியில் வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. எங்களைப் பிரம்பால் அடிக்கிறார். மிகவும் பெரிய பிரம்பு. வலி தாங்கமுடியவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது.” குழந்தையைப்போல் பேசினாள். விம்மினாள். “எங்களைக் காயப்படுத்தும் வரை அடிப்பதை அவர் நிறுத்தப்போவதில்லை. ஏன் இப்படி அடிக்கிறார்?” நான் அவளையே, அவள் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று கேட்டேன். நான், சில நோயாளிகளால் பதில்களைத் தாங்களே கண்டுபிடிக்க முடியுமென்று படித்திருக்கிறேன். ஒருவன் தன் நிலையை மறந்து, அதற்கு மேன்பட்ட நிலையில் உள்ளபொழுது, இதனைச் செய்ய முடியும். கேத்தரினால் அப்படிப்பட்ட நிலையை அடைய முடிகின்றதா எனக் கண்டறிய விழைந்தேன். கேத்தரினுக்கு அந்த சக்தி இருந்தால், அதன் வழியாக அனைத்து விஷயங்களையும் சுலபமாக அறிந்துகொள்ள முடியும்.

“நாங்கள் வேண்டுமென்று அவர் விரும்பியதே கிடையாது.” மென்மையாக முணகினாள். “நாங்கள் அவர் வாழ்வில் இடையூராக வந்துவிட்டோமென்று நினைக்கிறார். . . . நாங்கள் இல்லாமல் இருப்பது நல்லதென்று நினைக்கிறார்.”

“உன் சகோதரனைக் கூடவா?” – நான் கேட்டேன். “என் சகோதரன் திட்டமிடாமல் உருவாகிவிட்டான். அவர்கள் திருமணத்துக்கு முன்பே கருவாகியிருக்கிறான்.” காத்தரினுக்கும் இது அதிர்ச்சியளிக்கக் கூடிய, புதிய தகவலாக இருந்தது. அவளுக்கு அவளுடைய தாய் திருமணத்துக்கு முன்பே கருவுற்றது அவளுக்கு தெரியாத விஷயமாக இருந்திருக்கிறது. கேத்தரினின் தாயார் அது உண்மையான தகவல்தான் என்று பின்னர் உறுதிபடுத்தினார்.

கேத்தரின் ஒவ்வொரு பிறவியைப் பற்றி விவரங்களைக் கூறியிருந்தாலும், அவளைப் பற்றி, அவளுக்கு தெரியாத விஷயங்களைக் கூறியதனால், ஒரு புதுவிதமான நிலையைத் தொட்டிருக்கிறாள். இந்த ஞானம் இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட, ஆவி நிலையில் உள்ளவர்களிடம் மட்டுமே இருக்கக்கூடிய ஞானம். அவளுடைய ஆழ்மனதிலிருந்து தன்னை மறந்த நிலையில், உதித்த ஞானம் அது. வழிகாட்டி ஆவிகளின் தொடர்பு இல்லாமல், அவர்களிடமிருந்து பெறாமல், கேத்தரினின் ஆழ்மனதில் இருந்து பெறப்பட்டது இந்தத் தகவல். கேத்தரின் இயல்பு நிலையில் இருக்கும்பொழுது, ஆழ்மனதில் இருந்து இத்தகைய தகவல்களை தட்டி எழுப்ப முடியவில்லை. கிழக்கிலும், மேற்கிலும் உள்ள துறவிகள், ஆழ்மனதை தட்டி எழுப்பி முக்தியடைந்து, ஞானம் பெற்றிருப்பார்களோ என்று நினைக்கிறேன். அது உண்மை எனில், நாம் அனைவரும் அத்தகைய நிலையை அடைவதற்கு சாத்தியங்கள் உள்ளன. மனோதத்துவ நிபுணர் “கார்ல்ஜன்” பலநிலைப் பட்ட உணர்வு நிலைகளை அறிந்திருக்கிறார். அவர் எழுதிய “தொகுப்பற்ற, உணர்வுகள் அற்ற நிலை” என்பது கேத்தரினுக்கு ஏற்பட்ட உணர்வு நிலையை ஒத்துள்ளது.

இயல்பான நிலையில் இருக்கும் கேத்தரினுக்கும், ஹிப்னடைஸ் நிலையில் இருக்கும் கேத்தரினுக்கும் இடையில் இருக்கும் அறிவுநிலை வேறுபாடு எனக்கு மிகவும் எரிச்சலை உண்டுபண்ணியது. ஹிப்னடைஸ் நிலையில் உள்ள கேத்தரினிடம் தத்துவம், ஆன்மீகம் சார்ந்த செய்திகளை, மிகவும் எளிதாக பகிர்ந்து கொள்ள முடிந்த்து. ஆனால் இயல்பான நிலை கேத்தரினுக்கு தத்துவம், ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் எந்தவித ஈர்ப்போ, ஈடுபாடோ இருக்கவில்லை. தினசரி உலக வாழ்க்கையில் தன் மனதை செலுத்துபவளாக இருந்தாள். தனக்குள் இருக்கும் சக்தியை அவள் உணர்ந்திருக்கவில்லை.

இந்த காலக்கட்டத்தில், கேத்தரின் அவள் தந்தையிடமிருந்து மிகுந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. காரணங்கள் வெளிப்படையாக தெரிந்தவைதான். “அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளன.” கேத்தரின் கூறினாள். நான், அவர் இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன். “அதற்கான பதில் என்னிடம் கூறப்படவில்லை.” கேத்தரினின் குரல் அசரீரி போல் ஒலித்தது. “எனக்குத் தேவையானவைகள் மட்டுமே என்னிடம் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி சிந்தித்து முழுமையானவர்களாக ஆகவேண்டும். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உள்ளன. ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். வரிசைப்படியே கற்றுக்கொள்ள முடியும். அப்பொழுதுதான் நமக்கு என்ன தேவைப்படுகிறது, நம்மிடம் என்ன குறைகிறது, அடுத்தவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது, அவர்களிடம் என்ன குறைபடுகிறது என்றுணர்ந்து நம்மை முழுமையாக்கிக் கொள்ளமுடியும்.” கேத்தரின் மென்மையான குரலில் பற்றற்று பேசுவதுபோல் தோன்றியது.

கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தவுடன், குழந்தையின் குரலில் பேசினாள். “எனக்கு குமட்டுகிறது. எனக்குப் பிடிக்காத உணவுகளைக் கொடுத்து என்னை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்துகிறார். வெங்காயம், லெட்யூஸ் . . . . . .எனக்கு சுத்தமாக பிடிக்காத உணவுகள். நான் வாந்தியெடுத்துவிடுவேன் என்று அவருக்குத் தெரியும். பொருட்படுத்தாமல் கட்டாயப்படுத்துகிறார்.” கேத்தரின் உமட்டினாள். தொண்டையடைத்து மூச்சுவிடத் திணறினாள். . . . . . . நான் முன்பு கூறியதுபோல், மேல்நிலைக்குச் சென்று அவள் தந்தை ஏன் அப்படி செய்கிறார் என்று கண்டுபிடிக்குமாறு கூறினேன்.

கேத்தரின் வேண்டாவெறுப்பாக முணகினாள். “அவர் மனதில் குற்ற உணர்ச்சியுள்ளது. என்னிடம் தவறாக நடந்து கொண்டதால், என்னையே வெறுக்கிறார். தன்னையும் வெறுக்கிறார்.” நான் கேத்தரினுக்கு மூன்று வயதில் இருட்டறையில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை முற்றிலும் மறந்து போயிருந்தேன். “எனக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார். நான் ஏதோ தவறு செய்ததனால்தான், அவர் என்னிடம் அப்படி நடந்திருக்கக் கூடும்.” அவள் மூன்று வயது மட்டுமே முடிந்த சிறிய குழந்தை. அவளது தந்தை குடித்திருந்தார். இருந்தாலும் கேத்தரின் தான்தான் தவறு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சியை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாள். நான் தவறு அவள்மேல் கிடையாது என்று தெளிவுபடுத்தினேன்.

“நீ சிறிய குழந்தையாக இருந்தாய். நீ ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு மூன்று வயது குழந்தையால் என்ன தவறு செய்ய முடியும்? தவறு செய்தது உன் தந்தை. குற்ற உணர்ச்சியை விட்டு வெளியே வந்துவிடு.”

“அவர் அப்பொழுதிலிருந்தே என்னை வெறுத்திருக்க வேண்டும்.” மென்மையாக முணகினாள். “எனக்கு முன்பே அவர் என்னை வெறுப்பது தெரியும். ஆனால் ஏனென்று புரியாத நிலை இருந்தது. நான் மீண்டும் அங்கே செல்ல வேண்டும்.” பல மணி நேரங்கள் கழிந்தன. நான் அவள் மீண்டும் அந்த நிலையை அடைவதற்கு, அவளுக்கு விரிவான செயல்முறையைக் கூறினேன்.

“நீ மிகவும் ஆழ்ந்த மனநிலையில் இருக்கிறாய். நான் மூன்றிலிருந்து ஒன்று வரை எண்ணப் போகிறேன். நீ இன்னும் ஆழ்நிலைக்குச் செல்லப்போகிறாய். மிகவும் பாதுகாப்பாக உணர்கிறாய். உன் குழந்தை பருவத்துக்கு செல்லப் போகிறாய். உன் தந்தைக்கும், உனக்கும் அசம்பாவிதம் நிகழ்ந்த காலகட்டத்துக்கு, நேரத்துக்கு செல்கிறாய். நான் ஒன்று என்று கூறியவுடன் அந்த வாழ்க்கை நேரத்துக்கு சென்று நினைவில் நிறுத்துவாய். உன்னுடைய நோயைத் தீர்ப்பதற்கு இது மிகவும் முக்கியமானது உன்னால் முடியும், மூன்று . . . . . இரண்டு . . . . . . ஒன்று” சற்று நீண்ட இடைவெளி.

“நான் என் தந்தையைப் பார்க்கவில்லை. . . . . . . . ஆனால் மக்கள் கொலைசெய்யப்படுவதைப் பார்க்கிறேன்.” அவள் குரல் கரகரப்பாகவும், ஓங்கியும் ஒலித்தது. “மக்களின் வாழ்க்கையை திடீரென்று நிறுத்துவதற்கு நமக்கு உரிமை கிடையாது. ஒவ்வொருவரும் அவர்கள் பாவம் தீரும்வரை வாழ அனுமதிக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி விடுவதில்லை. நமக்கு அந்த உரிமை கிடையாது. நாம் அவர்களை வாழவிட்டிருந்தால் செய்த பாவங்களால் அதிகமாக துன்பப்பட்டிருப்பார்கள். இறந்தபிறகு, வேறொரு பரிமாணத்துக்குச் சென்று அங்கேயும் துன்பப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு அமைதி எப்பொழுதும் இல்லை. அவர்கள் திரும்பி அனுப்பப்பட்டிருப்பார்கள். வாழ்க்கை மிகவும் துன்பமயமானதாக இருந்திருக்கும். தங்களுக்கு துன்பம் விளைவித்ததற்காக, யாரையெல்லாம் பழிவாங்கி துன்பம் இழைத்தார்களோ, அந்தப் பாவத்தையும் கழுவ வேண்டும். மக்களின் உயிரைப் போக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இறைவனுக்கு மட்டுமே தண்டனை தரும் உரிமை உண்டு. நாம் தண்டனை கொடுக்கக் கூடாது. இந்தப் பாவத்திற்கு தண்டனையுண்டு.”

சில நிமிடங்கள் கழிந்தபின் “அவர்கள் போய்விட்டார்கள்” என்று முணகினாள். வழிகாட்டி ஆவிகள், இன்று மற்றுமொரு உறுதியான, தெளிவான தகவலைக் கொடுத்துள்ளது. எந்தவிதமான சூழ்நிலையிலும், உயிரை எடுப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. ஆண்டவன் மட்டுமே தண்டனை அளிப்பதற்கு பொருத்தமானவன்.

கேத்தரின் மிகவும் களைத்திருந்தாள். நான் அவளுக்கும் அவள் தந்தைக்கும் இடையே உள்ள பழைய பிறவி தொடர்புகள் சம்பந்தமாக தெரிந்துகொள்ளும் எண்ணத்தைத் தள்ளிவைத்தேன். சமாதி நிலையிலிருந்து அவளை மீட்டேன். கேத்தரினுக்கு கிறிஸ்டியன் பிறவியையும், இளம்பிராய (கேத்தரின்) நிகழ்ச்சிகளையும் தவிர வேறொன்றும் நினைவில் இல்லை. பெரிய பாரம் நீங்கிய எண்ணத்தில், களைப்படைந்திருந்தாலும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டாள்.

நான் என் மனைவி கரோலினை நோக்கினேன். நாங்களும் மிகவும் களைப்படைந்திருந்தோம். பயத்துடனும், நடுக்கத்துடனும் கேத்தரினின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நாங்கள் மூழ்கியிருந்தோம். எங்களுக்கு அது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.

---தொடரும். 


யக்ஷ்யப்பிரச்சனை:


தொடர்ச்சி-3

மகாபாரதத்தில் தன் சகோதர்களைக் காக்க யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த பதில்கள்.
·       நிறைவான நிலைஎது? --------- சித்தத்தில் நல்ல அமைதி அடைவது
·       சிறந்த கருணை எது? ----------- எல்லோருக்கும் சுகத்தை விரும்புவது.
·       வெல்ல முடியாத பகைவன் யார்? ------------------ கோபம்.
·       முடிவில்லாத நோய் எது?----------------- பேராசை.
·       எப்படியிருப்பவன் சாது? ------------------ எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இருப்பவன்.
·       எப்படியிருப்பவன் அசாது?-------------------- தயை அற்றவன்.
·       எது மோகம்? -------------- தருமத்தை ஆறியாமை.
·       எது மானம்?--------------- நான் எண்ணும் அகங்காரம்.
·       எது சோகம்?------------------- அஞ்ஞானம்.
·       எது ஸ்நானம்?---------------- மன அழுக்கை நீக்குவது.
·       பிறப்புக்கு என்ன காரணம்? ---------------- ஆசை.
·       எவன் அழிவில்லாத நரகத்தை அடைகிறான்? ------------பொருளிருந்தும், பேராசையால் பிறருக்குக் கொடுக்காமலும், தானும் அனுபவிக்காமலும், யாசிப்பவனுக்குத் தருகிறேன் என்று கூறிவிட்டு மறுப்பவனும் அழிவில்லாத நரகத்தை அடைவார்கள்.
·       பிராமண்யம் என்பது பிறப்பினாலா? ஒழுக்கத்தினாலா? வேதம் ஓதுவதாலா? சாஸ்திர ஞானத்தினாலா? எதனால் உண்டாகிறது?--------------பிராமண்யத்துக்கு பிறப்பும், வேதம் ஓதுவதும், சாஸ்திர பயிற்சியும் காரணமில்லை. ஒழுக்கமே காரணம்.
·       இன்சொல் கூறுபவன் எதை அடைகிறான்?----------------- எல்லோருக்கும் அன்பனாகின்றான்.
·       ஆராய்ந்து செயல்புரிபவன் எதை அடைகிறான்? ----------- வெற்றியை அடைகிறான்.
·       அநேகர்களை நண்பர்களாக செய்து கொள்பவன் எதை அடைகிறான்? -------------- சுகத்தை அடைகிறான்.
·       தருமத்தில் பற்றுள்ளவன் எதை அடைகிறான்? ------------ நற்கதியை அடைகிறான்.
·       திரும்பப் பெற முடியாதது எது? -------------- கழிந்த நாட்கள்.
·       எவன் மகிழ்ச்சி அடைகிறான்? ------------- கடனில்லாதவனாகவும், அயலூர் போகாதவனாகவும், பகலில் ஐந்தாவது காலத்திலோ, ஆறாவது காலத்திலோ கீரையாவது தன் வீட்டில் சமைத்து உண்பவனாகவும் இருப்பானோ அவன் மகிழ்ச்சி அடைகிறான்.
·       எது வழி?------------- ஆன்றோர்கள் செல்லும் வழிதான் வழி.
·       எது தினம் நடக்கும் நிகழ்ச்சி?-------------------பூமியானது சமையல் செய்யும் பாத்திரம். ஆகாயம் அதன் மூடி. காலமானது, சராசரங்களையெல்லாம் அதில் இட்டு, இரவு பகலாகிய விறகை வைத்து, சூரியனாகிய நெருப்பை மூட்டி, மாதம் பருவங்களாகிய கரண்டிகளால் கிளறிப் பக்குவம் செய்கின்றதென்பதுதான் தினமும் நடந்து வருகின்ற நிகழ்ச்சி.
·       எது ஆச்சர்யம்? ---------------- தினந்தோறும் இறப்பவர்களைக் கண்டும், அது தமக்கில்லையென்று எண்ணியிருக்கின்றார்களே, அதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.
·       “தர்மரே! நான் கேட்ட கேள்விகட்கு நன்கு விடை கூறினாய். மாண்டிருக்கின்ற உன் சகோதரர்களில் உனக்கு விருப்பமான ஒருவரை தேர்ந்து கூறவும்”. 
“நகுலனே பிழைக்க வேண்டும்.” 
“தருமாபீமன் உனக்கு அன்பன். ஆற்றல் படைத்தவன். அர்ச்சுனன் எல்லோரிலும் சிறந்தவன். நீ என்ன காரணத்தால் மாற்றாந்தாயின் மகனான நகுலன் பிழைக்க வேண்டுமென்று விரும்புகிறாய்? 
“யட்சனே! ஒரு போதும் நான் தருமத்தை விடமாட்டேன். வேற்றுமை எனக்கு இல்லை. என் பிதாவுக்கு இரு மனைவியர். இருவர்களும் புத்திரர்கள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். குந்திதேவிக்கு நானும், மாத்ரிதேவிக்கு நகுலனும் இருக்கட்டும். அதுதான் தர்மம்.” 
யட்யமூர்த்தி “எல்லோரும் பிழைக்கட்டும்” என்றார். 


சிறுவர்களுக்கான கணிதப் புதிர்:

ஒருவர் இரண்டு கார்களை விற்கிறார். முதல் காரை ரூபாய் 10,000 –க்கு விற்கிறார். அதில் 10 சதவிகிதம் லாபம் அடைகிறார். இரண்டாவது காரையும் ரூபாய் 10,000 –க்கு விற்கிறார். ஆனால், அதில் 10 சதவிகிதம் நஷ்டம் அடைகிறார். கேள்வி இதுதான். ஆக மொத்தத்தில் அவர் அடைந்தது லாபமா, நஷ்டமா அல்லது லாபம், நஷ்டம் இல்லாத நிலையை அடைந்தாரா? ஐந்து நிமிடத்தில் பதில் சொல்ல வேண்டும்.

12 comments:

  1. /// மக்கள் கொலை செய்யப்படுவதைப் பார்க்கிறேன் ///

    சுவாரஸ்யத்துடன் செல்கிறது...

    யக்ஷ்யப்பிரச்சனை :

    /// எது ஆச்சர்யம்...? : தினந்தோறும் இறப்பவர்களைக் கண்டும், அது தமக்கில்லையென்று எண்ணியிருக்கின்றார்களே, அதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்... ///

    அறிந்து கொள்ள வேண்டியவை... நன்றி...

    முடிவில் =

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      முடிவில் =, இது சரியான விடை அல்ல.

      லாபத்துக்கு விற்ற கார் வாங்கிய விலை = 9,091 ரூபாய்.
      நஷ்டத்துக்கு விற்ற கார் வாங்கிய விலை = 1,1000 ரூபாய்.
      அதனால் மொத்தத்தில் நஷ்டம் = 91 ரூபாய்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  2. //தம் குழு என்று கருதுபவர்களைத் தவிர்த்து, மக்கள் மற்றவர்களிடம் உண்மையான உணர்வுடன் பழகுவது கிடையாது. இத்தகைய குழு உணர்வு, துவக்கத்திலேயே மற்ற குழுக்களைப் பற்றிய தவறுதலான புரிந்துணர்வுகளுக்கு வித்தாகிறது//

    //மக்களின் உயிரைப் போக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இறைவனுக்கு மட்டுமே தண்டனை தரும் உரிமை உண்டு. நாம் தண்டனை கொடுக்கக் கூடாது.//

    கேத்தரின் வாயிலாக Dr.Brian Weiss சொல்லும் ஒவ்வொரு கருத்தும் அருமை. நல்ல ஒரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.

    //எங்களுக்கு அது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.//

    படித்த எங்களுக்கும் தான்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா!
      உங்கள் வார்த்தைகள் மிகவும் உற்சாகமளிக்கின்றன!
      நன்றி.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படித்து முடித்தேன். சுவாரசியம். பல செய்திகளும் அதிர்ச்சியையும், அதே சமயத்தில் நம்மை மீறிய சக்தி இருப்பதை உறுதி செய்வதாகவும் உள்ளன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகள் தோறும் புது அத்தியாங்களை பதிகிறேன். நேரமிருப்பின் தொடர்ந்து படிக்கவும்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete

  4. திரு பக்கிரிசாமிக்கு, உங்கள் பதிவுகள் எல்லாம் ஒரே மூச்சில் படித்தேன். முற்பிறவி நினைவுள்ளவர்கள் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ( எந்த ஹிப்னாடிக் தேவையுமில்லாமல்.) ஆனால் அவர்களின் விசேஷ சக்திகள்(?) ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஒரே மனிதர் பல பிறப்புகளின் காலத்துக்குச் சென்று நடந்தவற்றை கூறுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு விஷயம் தெளிவாகவில்லை. முற்பிறவிகளுக்குச் சென்று அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட காதரீனால் அவற்றை இப்போது நினைவில் இருத்த முடிகிறதா.? அப்படி நினைவுகளை நிறுத்த முடிந்தால் அவர் வாழ்க்கையே மிகவும்குழப்பத்துக்குள்ளாகிவிடுமே. இதை கதையல்ல. உண்மை நிகழ்வுகள் என்று வேறு சொல்கிறீர்கள். நமக்கு நாமே தெளிவாக ஆட்டோ சஜெஸ்சன் மூலம் உடல் நிலையை மேம்படுத்தமுடியும் என்றே தோன்றுகிறது. உடலை ரிலாக்ஸ் செய்ய வைக்க முடியும் என்றே தோன்றுகிறது மற்றபடி ஹிப்னாடிசம் குறித்து அதிகம் தெரியாது. உங்கள் கொசுறு செய்திகளும் இண்டெரெஸ்டிங். இரு குழந்தைகள் விளையாடும் நினைத்த பொருளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டை எங்கள் வீட்டில் குழந்தைகள் black magic என்று விளையாடுவார்கள். பதிவுகளை ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!

      மிகவும் நீண்ட பின்னூட்டம். இந்த புத்தகத்தை எழுதியவர் ஒரு டாக்டர். இதனை எழுதியதால் மிகவும் பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். தனது தொழிலை பணயம் வைத்து எழுதியிருக்கிறார். அதனால் நிகழ்வுகள் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

      காதரின் கால ஒட்டத்தில் முற்பிறவி ஞாபகங்களை மறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு காலத்தில், அவளுக்கே அப்படி கூறியிருக்கிறோமோ என்று சந்தேகம் கூட வருமென்று நினைக்கிறேன்.

      ஆட்டோ சஜஷன் என்பதை கீழ்க்கண்ட செய்யுளும் கூறுகிறது என்று நினைக்கிறேன். இதனால் சில சமயங்களில் நம் சக்தியையும் மீறி நம்மால் செயலாற்றவும் முடிகிறது.

      “மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
      எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
      அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
      கருமமே கண்ணாயி னார்”

      கொசுறுகளை படித்ததற்கும் நன்றி. தொழிலதிபர்களுக்கு பணம் ஈட்டாத பணவிரயம் இல்லாத, குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டுகள் மறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். Black Magic விளையாட்டத்தைத்தான் சொல்லுகிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. இன்றுதான் தங்கள் பதிவுக்கு வந்தேன். இந்தப் பதிவைப் படித்தேன்.படித்த செய்திகளின் பகிர்வும் அதற்குண்டான தங்களின் எதிர்வினைகளும் சமமாகப் பிணைந்து பயணிக்கும் நேர்த்தியைக் கண்டேன். மனதிற்கு இசைவானதாகவே இருந்தது. தமிழ்க் கவிதைகளின் ஊடாகவே செல்லும் எழுத்துப்பயணம் பிடித்திருந்தது. தங்களின் மற்ற பதிவுகளையும் படிக்கவேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்தது. மற்றவற்றையும் படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!

    தமிழில் அழகுற, நீங்கள் எழுதும் அளவுக்கு என்னால் எழுதமுடியவில்லையே என்று ஏக்கமுற வைத்துவிட்டது உங்களது பின்னூட்டம். நான் தமிழில் எழுதி இருபது வருடங்களுக்கு மேலாகிறது. எனது தமிழ் துருப்பிடித்துவிட்டது. மீட்க முடிந்தவரை முயற்சி செய்கிறேன். தொடர்ந்து படித்து வரவும்.கருத்துக்களை எதிபார்க்கிறேன்.


    அன்புடன்
    பக்கிரிசாமி நீலகண்டம்

    ReplyDelete
  7. இன்னிக்குப் பதிவு வந்திருக்குமோனு ஆவலோடு வந்தேன், ஏமாற்றம் தான்! :)))))

    ReplyDelete
    Replies
    1. I have already posted the new episode, and replied two comments. There may be something wrong somewhere. Please check again.

      Regards
      Packirisamy N

      Delete