பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 29, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 6



2000-ஆம் ஆண்டின்பொழுது, யூஜின் நோயினால் பாதிப்படைந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. யூஜினுடைய வாழ்வும், கால ஓட்டத்தில் ஒரு சமனிலையை அடைந்தது. அவர் பிடித்ததை சாப்பிடுவார். சிலசமயங்களில் ஒரு நாளுக்கு ஐந்து, ஆறு தடவைகள் சாப்பிடுவார். தினசரி காலையில் திறந்த வெளியில் நடைப்பயிற்சி செய்வார். தொலைக்காட்சியில் வரலாற்று சேனலில் எந்த நிகழ்ச்சி இருந்தாலும் பார்ப்பார். நிகழ்ச்சி மறுஒலிபரப்பு என்பதும் அவருக்குத் தெரியாது. அவரால் கண்டுபிடிக்க இயலாது.
வயது ஏறஏற, யூஜினுக்கு நோயின் விளைவாக ஏற்பட்ட பழக்கங்களால் பிரச்சனைகள் உதிக்க ஆரம்பித்தது. 


இருந்த இடத்தில் அசையாமல் மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்ப்பார். அவருக்கு நிகழ்ச்சிகள் சலிப்பதே கிடையாது. மருத்துவர்கள் யூஜினுடைய இதயம் பலவீனமாகிவிடும் என்று பயந்தனர். யுஜினுடைய மனைவி, யூஜினுக்கு நல்ல சத்துள்ள உணவுகளையே தர விரும்பி, பழ வகைகளை அதிகமாக ஃபிரிஜ்ஜில் வைத்திருப்பார். ஆனால் யூஜின் எப்பொழுதும் பன்றி மாமிசம் மற்றும் முட்டைகளையே ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து சாப்பிடுவார். அவருக்கு அதுபோன்ற பழக்கங்களே வளர்ந்திருந்தது. முதுமையடைந்ததால், யூஜினுடைய எலும்புகளும் வலுவிழந்தன. ஆனால் யூஜினைப்பொறுத்தவரை, அவருடைய வயதை உண்மையான வயதைவிட இருபது வருடங்கள் குறைவாகவே நினைத்து வந்தார். அதனால் அந்த வயதுக்குரிய வேகத்திலேயே அவருடைய நடைமுறைகளும் இருந்தன.


“நான் என் வாழ்க்கை முழுவதும், மூளையின் ஞாபகசக்தியை ஒரு அதிசயமாகவே பார்த்துவந்திருக்கிறேன். யூஜினைக் கண்டவுடன், முற்றிலும் அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவதில்லை என்று புரிந்துகொண்டேன். மூளை அனைத்தையும் மறந்துவிட்டாலும், மகிழ்ச்சியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளக்கூடிய திறமையைப் பெற்றிருக்கிறது. சில சமயங்களில் அதுவே யூஜினுக்குப் பிரச்சனையாகவும் அமைந்துவிடுகிறது” என்று ஸ்கொயர் கூறுகிறார்.
பழக்கங்களைப்பற்றி புரிந்துகொண்ட யூஜினின் மனைவி பெவர்லி, யூஜினுக்கு உதவும் வகையில், சில மாற்றங்களை ஏற்படுத்தி நல்ல பழக்கங்களை அவரிடம் கொண்டுவர முயற்சி செய்தார். ஃபிரிஜ்ஜில் பன்றி மாமிசம் மற்றும் முட்டை வைக்கும் அளவினை மட்டுப்படுத்தினார். யூஜினுக்கு அருகில் காய், கனிகளை வைத்தார். அதை யூஜின் சாப்பிட ஆரம்பித்த்தும் சமையலறைக்கு செல்லும் பழக்கத்தைக் கைவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக யூஜினுக்கு உணவுப் பழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இருப்பினும் வயதான காரணத்தினால் ஒருமுறை யூஜினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்ட்து. அங்கு அவருடைய உடம்பில் இணைக்கப்பட்ட குழாய்களை, ஒவ்வொருமுறை விழித்தெழும்பொழுதும், யூஜின் பிடுங்கி எறிய முற்பட்டார். எத்தனை முறை எடுத்து சொன்னாலும் அவருக்கு அது நினைவில் நிற்கவில்லை. அடுத்தமுறை எடுத்துவிட்டால் அவரைக் கட்டிப்போட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பலனில்லை. அடுத்தமுறையும் அவர் அதை சுத்தமாக மறந்திருப்பார்.


கடைசியில், அவருடைய மகள், யூஜினிடம் அவர் பெரிய அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதாகவும் அதற்கு அந்தக் குழாய்கள் அவர் உடம்பில் இருப்பது அவசியம் என்றும் கூறி அவரை நம்ப வைத்தார். தாதிகளும் சிறிது நேரத்துக்கு ஒருமுறை அவரிடம், அவர் மிகப்பெரிய உதவி செய்வதாகக் கூறி அவரை நம்ப வைத்தனர். அதனை அவர் மிகவும் பெருமையாக நினைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் குழாய்களை பிடுங்குவதை நிறுத்திவிட்டு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். சில வாரங்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றபின் அவர் வீடு திரும்பினார்.


பிறகு 2008-ல் யூஜின் வீட்டில் கீழே விழுந்ததில் அவருடைய இடுப்பெலும்பு முறிந்துவிட்டது. இந்த முறையும் அவரை மருத்துவமனையில் சேர்த்து நீண்ட நாட்கள் தங்கவேண்டிய சூழலாக அமைந்துவிட்டது. மருத்துவர்களும் தாதிகளும், யூஜினுக்கு ஒவ்வொரு முறை விழிப்பு வந்ததும் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று நினைவுபடுத்தவேண்டிய பிரச்சனை இருந்தது. யூஜின் குடும்பத்தினர் யூஜினைச் சுற்றி அவருடைய குடும்பப் புகைப்படங்கள், அவர் ஏன் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதற்காக எழுதப்பட்ட விளக்கங்கள் போன்றவற்றை அவரைச் சுற்றி வைத்தனர். ஒவ்வொரு நாளும் அவரது மனைவியும் மற்ற குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்துக்கொண்டனர்.


ஆனால் இந்த முறை யூஜின் அவ்வளவு கவலைப்பட்டத்தாகத் தெரியவில்லை. ஏன் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று அவர் கேட்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர் அமைதியாக இருந்ததாக டாக்டர் ஸ்கொயர் குறிப்பிடுகிறார். “கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அவருக்கு மறதி நோய் உள்ளது. அவரது மூளை தான் ஏதோ பிரச்சனையில் இப்படித்தான் இருக்கிறோம் என்று ஒத்துக்கொண்டுவிட்டதுபோல் தோன்றியது.” என்கிறார் டாக்டர் ஸ்கொயர்.


யூஜினுடைய மனைவி பெவர்லியும் நாள் தவறாமல் மருத்துவமனைக்கு வந்தார். “நான் மருத்துவமனையில் யூஜினிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பேன். அவரை மிகவும் நேசிப்பதாகக் கூறுவேன். எங்களது கடந்த காலம் மிகவும் இனிமையாக இருந்ததாக அவருக்கு நினைவுபடுத்துவேன். பழைய புகைப்படங்களைக்காட்டி அவர் எந்த அளவுக்கு நேசிக்கப்படுகிறார் என்று அவருக்கு நினைவுபடுத்துவேன். எங்களுக்கு மணமாகி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. அதில் முப்பத்தைந்து வருடங்கள் இயல்பான தம்பதிகளாகத்தான் இருந்தோம். இப்பொழுது சில நேரங்களில் கடினமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? எனக்கு என்னுடைய பழைய கணவர் திரும்பவும் வேண்டும். இருந்தாலும் எப்படியோ அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதுதான் சற்று நிம்மதி தரும் விஷயம்.”


சில வாரங்களுக்குப் பிறகு ஒருமுறை யூஜினுடைய மகள் யூஜினை சந்திக்க வந்தாள். யூஜின் அவளிடம் “ இன்று என்ன் ப்ரொகிராம்?” என்று வினவினார். அவரது மகள் அவரை சக்கர நாற்காலியில் அவரை மருத்துவமனைக்கு வெளியே புல்தரைக்கு அழைத்து சென்றார். “இன்று மிகவும் அருமையான க்ளைமேட்டாக உள்ளது. அதிக வெப்பமுமில்லை. அதிக குளிருமில்லை.” என்றார். அவரது மகளும் அதனை ஆமோதித்தார். அவள் தனது குழந்தைகளுடன் எப்படி பொழுதைப் போக்குவாள் என்று விவரித்தாள். தந்தை சீக்கிரம் குணமாகி வீடு திரும்பிவிடுவார் என்று அவள் நினைத்தாள். சூரியன் மறைய ஆரம்பித்ததும் அவள் தந்தையை அவரது அறைக்கு அழைத்து செல்ல முற்பட்டாள்.
அப்பொழுது யூஜின் மகளை நோக்கி “ உன்னைப்போன்ற மகளைப் பெறுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.” என்று திடீரென்று கூறினார். அப்படி அவர் கடைசியாக எப்பொழுது கூறினார் என்று அவரது மகளுக்கு நினைவில் இல்லை. “நானும் தங்களைத் தந்தையாகப்பெற பாக்கியம் செய்திருக்கவேண்டும்” என்று பதிலளித்தாள்.“ “இன்று மிகவும் அருமையான க்ளைமேட்டாக உள்ளது. அதிக வெப்பமுமில்லை. அதிக குளிருமில்லை. நீ என்ன நினைக்கிறாய்?.” யூஜின் மகளிடம் மீண்டும் கேட்டார்.


அன்று இரவு சுமார் ஒரு மணி அளவில் பெவர்லிக்கு மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது. யூஜினுக்கு பெரிய மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற முடியாமல் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. யூஜின் போய்விட்டார். இப்பொழுது, மருத்துவமனையில் ஸ்கேன் செய்த அவரது படங்கள் பலப்பல மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.


“யூஜின் மருத்துவத்துறையில் உதவ முடிந்ததற்காக மிகவும் பெருமைப்பட்டிருப்பார். எங்களுக்கு மணமான புதிதில், ஏதாவது நல்ல காரியம் செய்யாமல் இந்த உலகைவிட்டு போகக்கூடாது என்று அவர் கூறுவார். உண்மையில் அவர் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஆனால் அவருக்குத்தான் அவர் செய்தது எதுவும், அவர் நினைவில் இல்லை.” பெவர்லி வருத்தத்துடன் டாக்டர் ஸ்கொயரிடம் கூறினார்.



-தொடரும்.





சில உண்மைகள்:



இந்த உண்மைகள் அனைத்தும் இந்திய மனப்பாங்குக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மைகள்தான் என்று நினைக்கிறேன்.


http://www.viralnova.com/regret-when-older/


விடாமுயற்சி என்பது இதுதானோ? 











8 comments:

  1. // ஏதாவது நல்ல காரியம் செய்யாமல் இந்த உலகைவிட்டு போகக்கூடாது என்று அவர் கூறுவார். உண்மையில் அவர் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஆனால் அவருக்குத்தான் அவர் செய்தது எதுவும், அவர் நினைவில் இல்லை.//

    திருமதி பெவர்லி, டாக்டர் ஸ்கொயரிடம் சொன்னது உண்மைதான். யூஜினிடம் Dr. ஸ்கொயர் செய்த ஆராய்ச்சியின் முடிவு தானே இன்று அநேக மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. உள்ளத்தைத் தொட்ட அறிவியல் நிகழ்வை எளிய முறையில் மொழியாக்கம் செய்து பதிவிட்டமைக்கு நன்றி!

    முதுமை அடையுமுன்பு அறிந்து கொள்ளவேண்டிய 37 உண்மைகளில் நீங்கள் சொன்னது போல் பெரும்பான்மையானவை நமக்கும் ஒத்துப்போகும் என எண்ணுகிறேன்.

    கீழே விழுந்தும் திரும்பவும் எழுந்து ஓடி, ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற Heather Dorniden, 'விழுவதும் எழுவதற்கே' என நிரூபித்துள்ளார். காணொளியை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      முப்பத்தேழு கருத்துக்களையும் யாராவது படிப்பார்களா என்ற சந்தேகத்துடன்தான் பதிவிட்டேன். படித்து கருத்திட்டமைக்கு நன்றி. கிட்டத்தட்ட அனைத்தும் ஒத்துக்கொள்ளக் கூடியவைகள்தான்.

      காணொளியில் இருந்த நிலை எனக்கிருந்தால் அந்த அளவுக்கு முயற்சித்திருப்பேனா என்பது சந்தேகமே. அவர் பாராட்டுக்குரியவர்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. யூஜின் அவர்களின் நிலை வருத்தப்பட வைத்தது... ஆனால் இன்னும் வாழ்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே !

      ஆமாம் யூஜின் இன்றும் நினைவில் வாழ்கிறார்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்
      .

      Delete
  3. இத்தனை சோதனை நேரத்திலும் கணவன் மீது அன்பு வைத்து அவர் தனக்கு வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருந்த யூஜினின் மனைவியைப் போல் ஒருவரை காண்பது அரிது. மேலை நாடுகளில் எடுத்ததற்கெல்லாம் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்று கூறிவருவதில் எந்த அளவுக்கு உண்மையில்லை என்பதற்கு ஐம்பதாண்டு காலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியர் ஒரு சான்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!

      என்னைப்பொறுத்தவரை மேலை நாடுகளில் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுப்பது என்ற விஷயத்தில் நம்மைவிட மிஞ்சிவர்கள் அவர்கள். விவாகரத்து என்பது இங்கு அதிகம்தான். அதற்கு பெண்களுக்கு தங்களால் சொந்தக்காலில் நிற்கமுடியும் என்ற எண்ணம் இருப்பது முக்கியமான காரணம். விவாகரத்து செய்ததால் சமூகத்தில் அவர்களுடைய மதிப்பு குறைவதும் கிடையாது. இந்தியாவில் இதற்கு எதிர்மறையாக உள்ளது.

      அவர்களுடைய திருமண உறுதிமொழியும் அனைவரும் அறிந்ததுதானே.

      I, ____, take you, ____, to be my (husband/wife). I promise to be true to you in good times and in bad, in sickness and in health. I will love you and honour you all the days of my life.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. யூஜின் என்றும் அனைவரின் நினைவுகளிலும் வாழ்வார். கருத்துகள் அருமை. யூஜினின் மனைவி பாராட்டத் தக்கவர்.

    ReplyDelete
  5. யூஜின் வாழ்க்கை மற்றவர்களூக்கு ஆராய்ச்சி அளவில் பயன்பட்டாலும், யூஜினின் இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது.

    ReplyDelete