பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, November 21, 2013

கதம்பம்-15





சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:

அத்தியாயம்-6

தவிப்பு தொடர்ச்சி:

தன் முனைப்பு மனம் தன்னைக் காத்துக்கொள்ள பல்வேறுபட்ட தற்காப்பு முறைகளை கையாள்கிறது. உண்மையில் தன்முனைப்பு நிலை மனமானது, கீழ் மனதுக்கும், மேல் மனதுக்கும் ஒத்துவரக்கூடிய அளவுக்கு சமரசம் செய்ய முயல்கிறது. அப்படி இயலாத பட்சத்தில், நிலைமையை சீரமைக்க அப்படிப்பட்ட ஒத்துவராத நிலை இல்லாததுபோல காட்டுவதற்கு முயற்சிக்கிறது.

எப்படியிருப்பினும், எல்லாவிதமான தற்காப்பு முறைகளும், ஒருவகையில் உண்மைக்குப் புறம்பான நடவடிக்கைகளே. நாம் நம்முடைய சுய உணர்வின்றி மேற்கொள்ளும் அனைத்து தற்காப்பு முறைகளும் பொய்யைத்தவிர வேறில்லை. பொதுவாக ஒரு பொய்யை மெய்ப்பிக்கவேண்டுமென்றால், அதிகமான பொய்களை தொடர்ந்து வெளிப்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட பொய்களின் சங்கிலி, ஒருநிலையைக் கடந்துவிட்டால், தன்முனைப்பு நிலை மனம், தன் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அத்தகைய சூழலில் தவிப்பு நிலை அதிகமாகி, ஒருவர் தன் மனதினை இழந்த நிலைக்குத் தள்ளப்ப்டுவார்.

இருப்பினும் ஃப்ராய்ட் தற்காப்பு முறைகளை, ஒரு தேவையான விஷயமாகவே பார்க்கிறார். ஒருவரை நாம், வாழ்நாள் முழுவதும், பிரச்சனைகளை எண்ணியே வாழ்ந்துகொண்டிருக்குமாறு கட்டாயப்படுத்துதல் சரியான செயல் கிடையாது. எனவே பிரச்சனைகள் இருந்தாலும், அப்படி எதுவும் இல்லாததுபோல் மனம் நினைத்துக்கொண்டு இருப்பது, வாழ்க்கையை சிறிதளவாவது மேம்படுத்தும். ஃப்ராய்டின் வழி வந்த மனோவியலாளர்கள், சில தற்காப்பு முறைகளை நேர்மறையாக செயல்படுத்தலாம் என்று கூறினர்.  ஃப்ராய்டும் “உயர் நிலையை அடைதல்” என்ற தற்காப்புமுறை, நேர்மறையாக செயல்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.

உயர் நிலையை அடைதல் (Sublimation)  :

தன்முனைப்பு நிலை மனம், தவிர்க்க நினைக்கும் உந்துதல்களை, வேட்கைகளை (பாலுணர்வு, கோபம், அச்சம் போன்று அனைத்தையும்) சமுதாயத்துக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில், சில சமயங்களில் ஆக்க சக்தியாகவும், வெளிப்படுத்தும் தற்காப்பு முறையை “உயர் நிலையை அடைதல்” என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.

எப்பொழுதும் அடக்கமுடியாத கோபம் கொண்டுள்ளவர், தன்னுடைய உணர்வுகளை தனது தொழிலில் செலுத்தி, ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவோ, வேட்டைக்காரராகவோ, போர்த்தளபதியாகவோ மாறி, ஏதோ ஒருவிதத்தில் சமுதாயத்தில் இணைய முற்படலாம். பாலுணர்வு பிரச்சனைகளால் துன்பப்படுபவர்கள், தனது சிந்தனைகளை படைப்புத்திறன் மிக்க கலைகளில் செலுத்தி சமுதாயத்துக்கு பலன் தரும் வகையில் மாற்றியமைக்க முற்படலாம்.

ஃப்ராய்டைப் பொறுத்தவரை, நேர்மறையான, படைப்புத்திறன் மிக்க எல்லாவிதமான செயல்களும், பாலுணர்வின் தற்காப்பாக விளையும், உயர் நிலையை அடைதலான தற்காப்பு முறையாகும்.

--- தொடரும்.



நினைவில் நின்ற சிறுகதை:
 
பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பாசன் (Maupassant, Guy de)
எழுதிய சுவீகாரப் புத்திரன் சிறுகதையை எப்பொழுது படித்தேன் என்று
நினைவில் இல்லை. ஆனால் கதையின் சாரம் மனதிலேயே தங்கிவிட்டது. தமிழில் அகிலன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டதாக ஞாபகம்.  பல குழந்தைகளையுடைய, இரண்டு ஏழைப் பெற்றோர்களில் ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுக்க மறுத்துவிடுகிறார். வாய்ப்பு அடுத்த பெற்றோர்களுக்கு போய்விடுகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன் பெரிய கனவானாக, உண்மையான பெற்றோரை சந்திக்க வருகிறான்.

சுவீகாரத்துக்கு மறுக்கப்பட்டவன் இப்பொழுது இளைஞன். வறுமையில் வாடும்
அவன், செல்வந்தனான சுவீகாரமான இளைஞனைக் காண்கிறான். தன பெற்றோரிடம், சுயநலத்துடன் எனக்கு வரவேண்டிய நல்ல வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள், என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான்.

எந்தப் பெற்றோர்கள் தவறிழைத்தார்கள்? சுயநலத்துடன் இருந்தது எந்தப்
பெற்றோர்கள்? சுவீகாரம் கொடுத்த பெற்றோர்களே சுயநலமற்ற பெற்றோர்கள் என்று நான் கருதுகிறேன். அனைவருக்கும் அப்படித் தோன்றுமென்று நான் நினைக்கவில்லை.


மனம் நெகிழ சில காணொளிகள்:


 
 
 

8 comments:

  1. பொதுவாக ஒரு பொய்யை மெய்ப்பிக்கவேண்டுமென்றால், அதிகமான பொய்களை தொடர்ந்து வெளிப்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட பொய்களின் சங்கிலி, ஒருநிலையைக் கடந்துவிட்டால், தன்முனைப்பு நிலை மனம், தன் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அத்தகைய சூழலில் தவிப்பு நிலை அதிகமாகி, ஒருவர் தன் மனதினை இழந்த நிலைக்குத் தள்ளப்ப்டுவார்.//

    உண்மைதான். சிலர் இதற்கு நாளடைவில் அடிமைகளாகிவிடுவதும் உண்டு. மிகைப்படுத்தி பேசுதலும் இந்த வகையைச் சார்ந்ததுதான். பிறருக்கு தீங்கு செய்யாத எதுவும் பொய்யில்லை என்பார்கள். அது வெறும் சால்ஜாப்புதானே தவிர வேறில்லை. அருமையான பகுதி இது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!.
      தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில், இக்கரையும் இல்லாமல், அக்கரையும் இல்லாமல் இருக்கவேண்டிய சூழல்.
      Damned if you do, damned if you don't.
      ஒரு பொய்கூட சொல்லாமல், ஒரு நாளைக்கூட கடத்தமுடியாது என்று நினைக்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. 'உயர்நிலை அடைதல்' என்ற தற்காப்பு முறையால் தவிர்க்க நினைக்கும் உந்துதல்களை ஆக்க சக்தியாக வெளிப்படுத்தலாம் என்பதை சரியான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கி, பகிர்ந்தமைக்கு நன்றி.

    இத்தகைய உந்துதல் உள்ளவர்கள் ஆக்க செயல்களில் ஈடுபடும்போது அவர்களது கவனம் வேறு திசைக்கு திருப்பப்படுவதால், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அது நன்மையாக முடிகிறது என நினைக்கிறேன்.

    சிறுகதையை நானும் படித்தேன். தங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். தங்களது சந்தோஷத்திற்காக பிள்ளையின் எதிர்காலத்தை வீணடித்த பெற்றோர்களைவிட, தங்கள் பிள்ளையாவது நல்வாழ்வு வாழட்டுமே என்று தத்து கொடுத்தவர்கள் தான் சுயநலமற்றவர்கள் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

    நீங்கள் தந்துள்ள இணைப்பின் மூலம் பார்த்த காணொளிகளில் மூன்றை முன்பே பார்த்திருந்தாலும் மற்றவை எல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன். உண்மையில் மனதை நெகிழவைக்கும் காட்சிகள்தான் அவைகள். ஆறறிவு பெற்றிருப்பதாக சொல்லப்படும் மனிதனைவிட அவைகள் புத்திசாலிகள் என எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!.

      என்னைப் பொறுத்தவரை பிடிக்காத விஷயங்கள் நடந்தால், முடிந்தால் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அல்லது மனதை ஏதாவது ஆக்க வழிகளில் செலுத்தி திசை திருப்பினால் நல்லது என்று நினைக்கிறேன்.

      இந்த கதையை எங்கள் அம்மாவிடம் கேட்டதற்கு முதலில் வாயைக் கழுவு, யாராவது பிள்ளையைத் தருவார்களா என்றுதான் சொன்னார்கள். அவர்களுக்கு வறுமை என்றால் என்ன என்று புரிந்திருக்காது.

      பிராணிகளுக்கு அறிவைவிட, அவற்றின் கள்ளங்கபடமில்லாத தன்மையே அவற்றை மனிதனைவிட மேல்நிலைக்கு எடுத்துச் செல்கிறது நினைக்கிறேன்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. பொய் சொல்கிறோம் என்று அவரவர் தெரிந்து கொண்டாலே இன்றைக்கு போதும் என்று தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      ஆமாம். பொய் சொல்கிறோம் என்றே யாரும் நினைப்பதில்லை, என்றுதான் நானும் கருதுகிறேன்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. தங்கள் பதிவின் மூலம், சிக்மன் ஃப்ராய்ட் தத்துவங்களை எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மாப்பசான் சிறுகதையின் முடிவு பற்றி, என்னால் கருத்து ஏதும் சொல்ல
    இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
      ஆமாம். இது சிலருக்கு முடிவெடுக்க முடியாத கேள்விதான்.
      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete