பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, July 25, 2013

பிறவி மர்மங்கள்: 11-2 (உண்மை நிகழ்வுகள்)

இறுதியாக கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“நகைகள் சென்றுவிட்டன. . . . . . ஒளியும் மறைந்துவிட்டது. . . . . . . எல்லாம் மறைந்துவிட்டன.”
“அசரீரிகளும் சென்றுவிட்டனவா?”
“ஆமாம். என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.” தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள்.
“ஒரு ஆன்மா என்னை நோக்குகிறது.”
“உன்னையா?”
“ஆமாம்.”
“அது யாரென்று அடையாளம் காணமுடிகிறதா?”
“சரியாகத் தெரியவில்லை. . . . . . அது எட்வர்ட் என்று நினைக்கிறேன்.” எட்வர்ட் ஒரு டாக்டர். சென்ற வருடம் இறந்துவிட்டார். எப்பொழுதும் கேத்தரினுக்கு உதவி செய்வதற்காக அவளுடன் அவர் இருப்பதுபோல் தோன்றுகிறது.
“அந்த ஆன்மா எப்படி தோற்றமளிக்கிறது?”
“வெண்மையான ஒளிபோல் தோன்றுகிறது. . . . . ஒளிபோல் தோன்றுகிறது. . . . . . அதற்கு முகம் எதுவும் இல்லை. ஆனால் அது எட்வர்ட் என்று என்னால் உணரமுடிகிறது.”
“உன்னுடன் பேசுகிறாரா?”
“இல்லை. என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்.”
“நான் பேசுவதை அவர் கேட்கிறாரா?”
“ஆமாம். ஆனால் இப்பொழுது அவர் சென்றுவிட்டார். நான் நலமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்பியிருக்கிறார்.” நாம் அனைவரும் கூறக்கூடிய பாதுகாக்கும் தேவதைகள் (Guardian Angels ) குறித்து சிந்தித்தேன். எட்வர்ட் அதுபோலவே வாஞ்சையுடன், கேத்தரினை, ஒரு பாதுகாக்கும் தேவதையாக கவனித்துக் கொண்டிருப்பது புரிந்தது. முன்பே கேத்தரின் பாதுகாக்கும் தேவதைகளைக் குறித்து கூறியுள்ளாள். குழந்தைகளாக இருக்கும்பொழுது நமக்குத் தோன்றும் கற்பனைகள், எந்த அளவுக்கு நமது பூர்வஜென்ம நினைவுகளை கொண்டிருக்கிறது என்று எண்ணி வியந்தேன்.

மேலும் ஆன்மாக்களிடம் அமைந்திருக்கும் வேறுவேறு நிலைகளும் எனக்கு வியப்பை அளித்தன. சில ஆன்மாக்கள் பாதுகாக்கும் தேவதைகளாக உள்ளன. சில வழிகாட்டும் நிலையில் உள்ளன. சில இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றன. ஆன்மாக்களுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் ஞானத்தைப் பொறுத்து அவைகளின் நிலைகள் அமைகின்றன என்று யூகிக்கிறேன். இறைவனுக்குரிய குணநலன்களுடன், இறைவனுடன் இரண்டற கலப்பதுதான் அவைகளின் இறுதி இலக்காக இருக்கிறது என்பதையும் உணர்கிறேன். இறைவனுடன் ஒன்றுகலந்து பேரின்பம் அடைந்து முக்தி பெறுவதைத்தான் ஆன்மீகவாதிகள் இறுதி இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டியிருப்பது புரிகிறது. அத்தகைய அனுபவ அறிவு அமையாமல் இருந்தபோதிலும், கேத்தரின் ஒரு ஊடகமாக செயல்பட்டு, அவள் மூலமாக கிடைக்கப்பெறும் ஞானம் உண்மையைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.

எட்வர்ட் மறைந்ததும் கேத்தரின் மௌனமானாள். அவள் மிகுந்த அமைதியுடன் இருப்பது அவள் முகத்தில் தெரிந்தது. பிறவிக்கப்பால், இறப்புக்கு அப்பால் சென்று இறைவனிடம் உரையாடி, அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய, என்ன ஒரு அருமையான பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள்! நாங்கள் ஞானத்தின் ஊற்றிலிருந்து இனிமேலும் தடைசெய்யப்படாத ஆப்பிள் கனிகளை உண்கிறோம். இன்னும் எவ்வளவு ஆப்பிள்கள் மிச்சமிருக்கின்றன என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

கேத்தரினுடைய அன்னை மின்னட்-க்கு மார்பக புற்றுநோய் கடந்த நான்கு வருடங்களாக உள்ளது. தற்சமயம் அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத நிலையை அடைந்துள்ளது. கேத்தரினுடைய அன்னை மிகுந்த மனோதைரியத்துடன் நோயை எதிர்கொண்டிருக்கிறாள். ஆனால் நோய்பரவும் வேகம் அதிகரித்து மரணவாயிலில் இருக்கிறாள்.

கேத்தரின் தனது சிகிச்சையின் விவரங்களை தன் தாய் மின்னட்-இடம் பகிர்ந்திருக்கிறாள். மின்னட்டும் கேத்தரின் கூறுவதை மிகுந்த நம்பிக்கையுடன் கேள்வியில்லாமல் ஒத்துக்கொண்டது எனக்கு சிறிது ஆச்சரியத்தை அளித்தது. அவளுக்கு ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களை அளித்தேன். நானும் என் மனைவி மற்றும் மின்னட் மூவரும் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான “கபல்லா” என்ற யூத ஆன்மீக கருத்துக்குகளை கற்பதற்கு மின்னட் ஏற்பாடு செய்தாள். அவை இன்றைய நாகரிக யூதர்களுக்கு தெரியாத விஷயங்கள். மறுபிறவி கருத்துகள், வேறுபட்ட பரிமாணங்கள் ஆகியவைகள் கபல்லாவின் கோட்பாடுகள் ஆகும். மின்னட்டின் மனோபலம் அதிகரித்தது. அதே நேரத்தில் அவளது உடல்நிலை மோசமடைந்துகொண்டேவந்தது. அவள் இறைவனுடன் கலக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆன்மா அழிவில்லாததென்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள். அந்த நம்பிக்கை அவளது உடல் உபாதைகளை மறக்க வைத்தது. அவளது மகள் “டோனா”-வின் முதல் குழந்தையின் வரவுக்காக உயிரைக் கையில் பிடித்துவைத்திருந்தாள். காத்தரினுடைய ஹிப்னாடிச அமர்வுக்கு ஒருமுறை வருகையளித்தாள். காத்தரினுடைய நேர்மையும், உண்மையான பரிவும், மின்னட்-ஐ இறப்புக்குப்பின் ஆன்மா இருப்பதை நம்ப வைத்தது.

மரணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மின்னட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நானும் என் மனைவியும் மின்னட்–டுக்காக நேரத்தை ஒதுக்கி, பிறப்பு மற்றும் இறப்புக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது என்றும் உரையாடினோம். மிகுந்த சுயமரியாதையுடைய மின்னட், கௌரவத்துடன் தாதிகளுடைய அரவணைப்பில், மருத்துவமனையிலேயே உயிர்நீக்க விரும்பினாள். அவள் மகள் “டோனா” ஆறுவார குழந்தையுடன், தாயை சந்தித்து இறுதிவிடையளித்தாள். நானும் என் மனைவியும் மின்னட் உடன் அதிக நேரம் செலவழித்தோம். மின்னட் மரணமடைந்த இரவு, மாலை ஆறு மணிக்கு நானும் என் மனைவியும் ஏதோ ஒருவிதமான உந்துதலால் மருத்துவமனை செல்ல விரும்பினோம். மருத்துவமனைக்குச் சென்று மின்னட் உடன் பொழுதைக் கழித்தோம். அந்த ஆறுமணி நேரங்களில், அந்த அறை முழுவதும் அமைதி மற்றும் ஆன்மீக ஒளியினால் நிறைந்திருந்தது. மின்னட் சுவாசிக்க சிரமப்பட்டாலும் வலி எதையும் உணரவில்லை. இறப்புக்குப் பிறகு, காணக்கூடிய பிரகாசமான ஒளி, இடைப்பட்ட நிலை மற்றும் ஆன்மாக்களின் வரவு குறித்து உரையாடினோம். மின்னட் தான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் கண்ணோட்டமிட்டாள். வாழ்வில் நேர்ந்த சில தவறுகளை அவளுக்கு ஒத்துக்கொள்வதில் சிரமமிருந்தாலும், ஒத்துக்கொள்ளும்வரை அந்த செயலாக்கம் நிறைவு பெறாது என்று அவள் உணர்ந்துகொண்டதுபோல் தோன்றியது. அவள் குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருப்பதை உணர்ந்தோம். அந்த நேரம் வருவதற்குள் அவள் பொறுமையிழப்பது தெரிந்தது. அதிகாலையில் அவள் ஆன்மா உடலை விட்டு பிரிந்தது. நான் ஒருவரை மரணத்தை நோக்கி வழிநடத்துவதென்பது இதுதான் முதல்முறை. மன உறுதியுடன் அவள் ஆன்மா பிரிந்தது எங்கள் வருத்தத்தைத் தணித்தது.

நோயாளிகளை குணப்படுத்தும் திறமை என்னிடம் குறிப்பிடதக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். பதற்றங்களையும், அச்சங்களையும் போக்குவது மட்டுமல்லாது, மரணம் குறித்து மனக்கலக்கங்களையும் என்னால் நன்கு களையமுடிகிறது. என்ன நோய், எப்படிக் குணப்படுத்த வேண்டும் என்று என் உள்மனது தன்னிச்சையாக எனக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. தன்னம்பிக்கையூட்டுவதும், அமைதி வழிக்கு நோயாளிகளைத் திருப்புவதும் எனக்கு மிகவும் எளிதான செயலாக மாறியுள்ளது. கேத்தரினுடைய அன்னையின் மறைவுக்குப் பிறகு, மரணவாயிலில் இருப்பவர்களை சாந்தப்படுத்தவும், வழிநடத்தவும் எனது உதவிகேட்டு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன. அப்படிப்பட்டவர்களும்கூட கேத்தரினுடைய அனுபவத்தைக் கேட்கவோ, இறப்புக்குப்பின் ஆன்மாவின் பயணத்தை அறியவோ விருப்பமில்லாதவர்களாக இருந்தனர். இருப்பினும், என்னால் ஓரளவுக்கு அவர்களுக்கும் ஆன்மீகத்தைப் புகட்ட முடிந்ததாக உணர்கிறேன். அன்பான வார்த்தைகள், அடுத்தவர்களுடைய அச்சங்களையும், கலக்கங்களையும் நன்கு புரிந்துகொள்ளுதல், கனிவான பார்வை, வாஞ்சையுடனான ஸ்பரிசம், இனிமையான ஒரு சொல் – மறந்துவிட்ட மனிதநேயத்தையும், ஆன்மீகத்தையும், எதிர்கால நம்பிக்கையையும்,  மற்றனைத்தையும் சரியாகப்பற்றிவிட இவை போதும். மேலும் அறிய விருப்பப்பட்டவர்களுக்கு தேவையான புத்தகங்களைப் பரிந்துரைத்தேன். காத்தரினுடைய அனுபவங்களையும் கூறினேன். அது அவர்களின் வாழ்வில் ஒரு புதிய ஜன்னலைத் திறந்ததை அறிகிறேன். விருப்பப்பட்டு கற்றவர்கள் புத்துணர்ச்சி அடைந்தனர். வாழ்வைப்பற்றிய புரியாத புதிர்களையும், அதற்கான பதில்களையும் விரைவில் கண்டறிந்தனர்.
மனோவியலாளர்கள் இன்னும் திறந்த மனதுடன் செயல்பட வேண்டுமென்று எண்ணுகிறேன். காத்தரினுடைய சிகிச்சையை அறிவியல் முறைப்படி, ஆவணப்படுத்தியதுபோல் முக்கியமான அனைத்து சிகிச்சைகளையும் ஆவணப்படுத்துதல் மிகவும் அவசியம். அதே சமயத்தில் மனோவியலாளர்களின் அனுபவங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். இறப்புக்குப்பின் உள்ள நிலைக்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு மனோவியலாளர்கள் சிகிச்சை அளித்தல் நலமென்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் நோயாளிகளின் பழைய நினைவுகள் அனைத்தையும் கிளற வேண்டுமென்ற அவசியமில்லை. இருப்பினும் நோயாளிகளின் அனைத்து அனுபவங்களையும் கருத்தில்கொண்டு, தங்களது அனுபவத்தையும் உபயோகித்தால் நல்ல பயன் கிடைக்கும்.

மக்கள் மரணத்தை நினைத்து அச்சம் கொண்டிருக்கிறார்கள். அணுஆயுதப் பேரழிவு, எய்ட்ஸ், பயங்கரவாதம், நோய்கள் ஆகிய ஆபத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். பதின்மவயதிலேயே சிலர், எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய எண்ணங்கள் முழுமையான சமூகத்தின் மன அழுத்ததைக் காட்டுகிறது.

தனிப்பட்ட முறையில் மின்னட், காத்தரினுடைய சிந்தனைகளை புரிந்து ஏற்றுக்கொண்டது மன நிம்மதியை அளிக்கிறது. அவளுடைய நம்பிக்கையின் பலம் அதிகரித்தது. அது உடல் உபாதைகளை பொறுத்துக்கொள்ள வழிவகுத்தது. நம் அனைவருக்கும் இதனால் கிடைக்கும் செய்தி, எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்வதே ஆகும். காத்தரினுக்கு நேர்ந்துபோல் வேறு சிலருக்கும் நேர்ந்திருக்கலாம். அதனை மனோவியலாலர்களும், அறிவியலாளர்களும், பொதுமக்களும் வெளிக்கொணர வேண்டும். நமது ஆன்மா அழிவில்லாதது. நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது. நாம் எப்பொழுதும் இணைந்தே இருப்போம்.

--தொடரும்.


உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்:

பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரியவந்திருக்கிறது. இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக்கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது. ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக்கூடுமா?

வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குணநலன்களைப்பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம். இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்.
1970-ல் “கிளாரியா சில்வியா” என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன. தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார். ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை A change of heart என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது. எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வதுபோன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன. மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.  உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக சில வீடியோக்கள் உள்ளன. முதல் பகுதி வீடியோவின் லிங்க்.


தர்க்கவகைப் புதிர்:

அநேகருக்கும் தெரிந்த புதிர்தான். ஒருவர் சொர்க்கத்துக்கு செல்லும் வழியில் இரண்டு பாதைகளைக் காண்கிறார். ஒன்று சொர்க்கத்துக்கு செல்லும் பாதை. மற்றொன்று நரகத்துக்கு செல்லும் பாதை. எந்தப்பாதை எதற்கு இட்டுச்செல்லும் என்று அவருக்குத்தெரியாது.

அங்கு இருவர் உள்ளனர். அந்த இருவருக்கும் சரியான பாதை எதுவென்று தெரியும். அந்த இருவரில் ஒருவர் நூறு சதவிகிதம் உண்மையை மட்டுமே சொல்லுவார். மற்றொருவர் நூறு சதவிகிதம் பொய்யை மட்டுமே சொல்லுவார். பொய் சொல்பவருக்கு இன்னொருவர் உண்மையே சொல்வாரென்று தெரியும். அதுபோல உண்மை சொல்பவருக்கும் இன்னொருவர் பொய் மட்டுமே சொல்வாரென்றும் தெரியும். இருவருக்கும் வழிதெரியுமென்று உண்மை பேசுபவருக்கும், பொய் பேசுபவருக்கும் தெரியும்.

வழிகேட்டு வருபவருக்கு யார் பொய் சொல்லுபவர், யார் உண்மையை சொல்லுபவர் என்று தெரியாது.அவர் அந்த இருவரில், ஒருவரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு வரும் பதிலைக் கொண்டு, சரியான வழியைக் கண்டுபிடித்து சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும்.

அவர் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு சரியான வழியைக் கண்டுபிடித்துவிட்டார். அவர் கேட்ட கேள்வி என்ன?




10 comments:

  1. /// அன்பான வார்த்தைகள், அடுத்தவர்களுடைய அச்சங்களையும், கலக்கங்களையும் நன்கு புரிந்துகொள்ளுதல், கனிவான பார்வை, வாஞ்சையுடனான ஸ்பரிசம், இனிமையான ஒரு சொல் ///

    இன்றைக்கு அதிகம் தேவை...!

    தொடரும் நினைவுகளும் குணங்களும் வியக்க வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. நம்பிக்கையின் சக்தி (Will Power) உடல் உபாதைகளை பொறுத்துக்கொள்ள வழி வகுக்கிறது என்பது உண்மை. மறைந்த சில தலைவர்கள் தாங்கள் எதிர்கொண்ட நோயை தங்களுடைய மனோ பலத்தால் தைரியமாக எதிர்கொண்டார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். DR.Brian Weiss அவர்களின் ஆய்வும் இதைத்தான் குறிக்கிறது என நினைக்கிறேன்.


    தாங்கள் தந்த இணைப்பின் காணொளியைப் பார்த்தேன். உறுப்பு மாற்றம் ஆன பிறகு தானம் கொடுத்தவரின் உயிரணுக்களின் நினைவுகள் தானம் பெற்றவருக்கு வரும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


    புதிருக்கான விடை.

    உண்மை சொல்பவரின் பெயர் T என வைத்துக்கொள்வோம். பொய் சொல்லுபவரின் பெயர் L என வைத்துக்கொள்வோம்.
    இருவரில் ஒருவரிடம், சொர்க்கத்திற்கு செல்லும் வழி எது என உங்கள் நண்பரிடம் கேட்டால் அவர் எதைக் காட்டுவார் என கேட்கவேண்டும். ஒருவேளை இந்த கேள்வி T யிடம் கேட்டால் அவருக்குத்தெரியும் L தவறான பாதையைத்தான் காட்டுவார் என்று. அவர் உண்மை பேசுபவர் ஆதலால் அவர் நரகத்திற்கு செல்லும் பாதையைத்தான் காண்பிப்பார். இதே கேள்வியை L இடம் கேட்டால் அவருக்குத்தெரியும் T சரியான பாதையைத்தான் காண்பிப்பார் என்று. ஆனால் அவர் பொய் பேசுபவர் ஆதலால் அவர் நரக்த்திற்கு செல்லும் பாதையைத்தான் காண்பிப்பார். எனவே இருவரும் நரகத்திற்கு செல்லும் பாதையைத்தான் காண்பிப்பார்கள். யாரிடம் கேட்டாலும் அவர்கள் காட்டும் பாதையை விட்டுவிட்டு மற்றதை தேர்ந்தெடுக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா! மனோபலத்தால் நிகழ்ந்த அற்புதங்கள் சம்பந்தமாக, சயனைட் உண்ட பிறகும் உயிரோடு இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி படித்திருக்கிறேன். ஸ்டாட்டின் காரணமாக என்னுடைய ஞாபகமறதி அதிகமாக உள்ளதால் அவர் பெயரை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இரண்டு, மூன்று முறைகள் அதனைப் புரிந்திருக்கிறார். ஒரு முறை சிலோனில் அந்த முயற்சி செய்யும் பொழுது மனதைக் கட்டுக்குள் நிறுத்தத் தவறி, சபையில் உயிரிழந்துவிட்டார்.

      புதிருக்கு மிகவும் சரியான பதிலைக் கூறி என் வேலையைக் குறைத்ததற்கு நன்றி.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  3. இறைவனுக்குரிய குணநலன்களுடன், இறைவனுடன் இரண்டற கலப்பதுதான் அவைகளின் இறுதி இலக்காக இருக்கிறது என்பதையும் உணர்கிறேன். இறைவனுடன் ஒன்றுகலந்து பேரின்பம் அடைந்து முக்தி பெறுவதைத்தான் ஆன்மீகவாதிகள் இறுதி இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டியிருப்பது புரிகிறது. //


    என்ன ஒரு அற்புதம்! நம் ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும் தேடி அடைந்ததும், நம்மைத் தேடச் சொல்வதும் இதைத் தானே! அந்த மருத்துவர் மிகவும் கொடுத்து வைத்தவர். அதிர்ஷ்டக்காரர்! இத்தகைய அருமையான பொக்கிஷத்தைப் பகிர்வதற்கு முதலில் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம்.
      இந்தப் புத்தகத்தை இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்புதான் படித்தேன். நமது இந்து கொள்கைகளுக்கு சமீபமாக இருப்பதுபோல் தோன்றியதால், அப்பொழுதே இந்தப் புத்தகத்தை தமிழில் பார்க்க விரும்பினேன். இப்பொழுதுதான் அதற்கான காலநேரம் சரியாக அமைந்தது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. உறுப்புதானம் செய்பவர்களுடைய குணாதிசயங்களும் அவர்களுடைய உறுப்புகளுடன் சேர்ந்து பெறுபவரை சென்றடையும் என்பது அதிசயமான விஷயம்தான். இத்தகைய ஆராய்ச்சியை இந்தியா போன்ற நாடுகளில் செய்தால் இன்னும் தெளிவான விடைகளை பெற முடியும் என்று நினைக்கிறேன். இதிலிருந்து இன்னொரு விஷயமும் தெரிய வருகிறது. அதாவது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் மூளையின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்பதை இந்த ஆராய்ச்சியின் முடிவு முறியடிக்கின்றதே. இல்லையென்றால் இதயத்தை மட்டும் வேறொருவரிடம் இருந்து பெற்ற ஒருவருக்கு குடிபழக்கம் எப்படி அவருடைய மதுப்பழக்கம் வரமுடியும்? மனித படைப்பே ஒரு விந்தையான விஷயம்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!

      காலம், காலமாக மனிதகுலம் அன்புக்கும் ஏனைய அன்பு தொடர்பான விஷயங்களுக்கும் இதயத்தைத்தான் தொடர்புபடுத்தியிருக்கிறார்கள். மூளையை அன்புடன் தொடர்புபடுத்தவில்லை. மற்றும், அறிவியலில் இன்றைய உண்மை, நாளைய முட்டாள்தனமாகலாம். எப்படியிருப்பினும் ஒவ்வொரு உயிரினமும், தாங்கள் கூறுவதுபோல் விந்தையான விஷயங்கள்தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. // நானும் என் மனைவியும் மின்னட் உடன் அதிக நேரம் செலவழித்தோம். மின்னட் மரணமடைந்த இரவு, மாலை ஆறு மணிக்கு நானும் என் மனைவியும் ஏதோ ஒருவிதமான உந்துதலால் மருத்துவமனை செல்ல விரும்பினோம். மருத்துவமனைக்குச் சென்று மின்னட் உடன் பொழுதைக் கழித்தோம். //

    இந்த உந்துதலைத்தான் தொலைவிலுணர்தல் (TELEPATHY) என்று சொல்லுகிறார்கள்.

    // அன்பான வார்த்தைகள், அடுத்தவர்களுடைய அச்சங்களையும், கலக்கங்களையும் நன்கு புரிந்துகொள்ளுதல், கனிவான பார்வை, வாஞ்சையுடனான ஸ்பரிசம், இனிமையான ஒரு சொல் – மறந்துவிட்ட மனிதநேயத்தையும், ஆன்மீகத்தையும், எதிர்கால நம்பிக்கையையும், மற்றனைத்தையும் சரியாகப்பற்றிவிட இவை போதும். மேலும் அறிய விருப்பப்பட்டவர்களுக்கு தேவையான புத்தகங்களைப் பரிந்துரைத்தேன். //

    மனிதநேயம் மிக்க அணுகுமுறை.

    இன்றைய பதிவு ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் பதிவு. மறுபடியும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி ஐயா!

      ஆமாம். தொலைவிலுணர்தல் என்று ஒரு புத்தகத்தை தாங்கள் ஒருமுறை பரிந்துரைத்த ஞாபகம் உள்ளது.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete