பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, March 27, 2014

சிறுகதை – 9 ( w.w. ஜேக்கப்)


குரங்கின் பாதம். (விதியின் வழி மதி செல்லும்)

 
நல்ல குளிரும், நசநசவென்று ஈரமும் மிகுந்த ஒரு குளிர்கால இரவு. ஜன்னல்களின் திரைப்பலகைகள் நன்கு மூடப்பட்டிருந்தது. அறையின் வெப்பத்தை அதிகப்படுத்த உண்டாக்கப்பட்ட நெருப்புத்தொட்டியில் கனழ்ந்துகொண்டிருந்த கரித்துண்டுகள் தங்களது வேலையை சரியாகச் செயததால், அறையின் கதகதப்பு குளிருக்கு அடக்கமாக இருந்தது. தந்தை வொய்ட்டும் மகன் ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். வொய்ட் ஒரு வித்தியாசமான வகையில் குதிரையை நகர்த்தி மகனுடைய ராஜாவை கொல்வதற்கு முயற்சி செய்தார். அதே சமயத்தில் தன்னுடைய ராஜாவுக்கு வரப்போகும் பிரச்சனையைப் அவர் பார்க்க விட்டுவிட்டார்.
 

“வெளியில் காத்து பிச்சிகிட்டு வீசுது.” மகனின் கவனத்தை திசை திருப்பி ஆட்டத்தில் வெல்ல முயன்றார் வொய்ட். “எனக்கும் காதுல விழுது.” மகன் கவனம் சிதையாது தந்தையின் ராஜாவுக்கு செக் வைத்தான். “இன்றைக்கு அவர் வரமாட்டார் என்று நினைக்கிறேன்.” செஸ் போர்டைப் பார்த்துக்கொண்டே தந்தை கூறினார். “செக் மேட். உங்களால் தப்பிக்க முடியாது.” ஹெர்பர்ட் தீர்மானமாகக் கூறினான். வொய்ட் பணியிலிருந்து ஓய்வடைந்தவர். ஹெர்பர்ட் இளைஞன். ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவன்.
 

“இந்த அளவுக்கு மோசமாகத் தோற்பேன் என்று நான் நினைக்கவேயில்லை.” தோல்வியை எதிர்பார்க்காத வொய்ட் சலிப்புடன் கூறினார். “எப்படியாவது இந்த முறை வென்றுவிடலாம் என்று நினைத்தேன்.” என்றார்.

“பரவாயில்லை. அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்.” வொய்ட்டின் மனைவி அவருக்கு ஆறுதல் கூறினார். தாயும் மகனும் தன்னைப்பார்த்து சிரிப்பதைப் புரிந்துகொண்ட வொய்ட், தனது தோல்வியை மறக்க மழுப்பலாக சிரித்து சமாளித்தார்.

 

வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்ட வொய்ட், “இதோ  வந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.” எனறபடி கதவை நோக்கி விரைந்தார். கதவைத்திறந்தவுடன் நல்ல உயரத்துடன், கம்பீரமான தோற்றம்கொண்ட ஒருவர் உள்ளே நுழைந்தார்.

“வாருங்கள். வாருங்கள். ராணுவ வீர்ர் மோரிஸ்” வொய்ட் வந்தவரை தனது குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார். மோரிஸை நெருப்புத்தொட்டிக்கு அருகில் அமருமாறு கூறிவிட்டு, வந்தவருக்கு பருகுவதற்கு ஏதாவது எடுத்துவருமாறு தனது மனைவியிடம் கூறினார் வொய்ட்.

 

மோரிஸ் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். பலதரப்பட்ட நாடுகளில் பணியாற்றிவிட்டு திரும்பியிருந்தார். “நீ ஊரைவிட்டு சென்று இருபது வருடங்களைத் தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன். இருபது வருடங்களில் மிகவும் மாறிவிட்டாய்.” வொய்ட் மோரிஸை நோக்கிக் கூறினார். வித்தியாசமான இடங்கள், மனிதர்கள் என்று தன் அனுபவங்களை மோரிஸ் எப்பொழுதும்  பகிர்ந்துகொள்வதால், அனைவரும் மோரிஸைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.
“எனக்கொன்றும் மோரிஸ் அவ்வளவாக மாறிவிட்டதுபோல் தோன்றவில்லை. அப்படியேதான் இருக்கிறார்.” வொய்ட்டின் மனைவி கூறினார்.

“நானும் ஒருநாள் இந்தியா சென்றுவரலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பமாக உள்ளது.” வொய்ட் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

“வேண்டாம். இருக்கும் இடத்திலேயே இருங்கள்.” பானத்தைப் பருகிவிட்டு குவளையைக் கீழே வைத்தார் மோரிஸ்.

“அங்கு இருக்கும் கோவில்களையும், கழைக்கூத்தாடிகளையும் பற்றிக்கேட்டது முதல் பார்த்தே ஆகவேண்டும்போல் தோன்றுகிறது. அன்று ஒருநாள் ஏதோ குரங்கின் பாதம் பற்றிக் கூறிவிட்டுப் பாதியில் நிறுத்திவிட்டாயே அதைப்பற்றிக் கூறேன்.” – வொய்ட்.

“வேண்டாம். தெரிந்துகொள்வதற்கு அதில் ஒன்றுமில்லை.” அவசரமாக மறுத்தார் மோரிஸ்.

“குரங்கின் பாதமா? என்ன அது? வித்தியாசமாக இருக்கிறதே.” ஆச்சரியத்துடன் கேட்டார் வொய்ட்டின் மனைவி.

“ஒன்றுமில்லை. ஒரு மந்திரவாதியின் கண்கட்டுவித்தை போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.” பதிலளித்தார் மோரிஸ்.

கண்கட்டுவித்தை என்று மோரிஸ் கூறியது, மூன்று பேருடைய ஆர்வத்தையும் அதிகப்படுத்திவிட்டது. குவளை காலியாகியிருந்ததை மறந்த மோரிசஸ், அதனை மீண்டும் எடுத்து பருக எத்தனித்தார். அதனைக்கண்ட திருமதி.வொய்ட், மோரிஸின் குவளையை நிரப்பினார்.

“இது ஒரு குரங்கின் பாதம். பாடம் படுத்தப்பட்ட ஒரு காய்ந்த பாதம்.” தன்னுடைய பையிலிருந்த அந்த பாதத்தை வெளியே எடுத்து ஹெர்பர்ட்டிடம் கொடுத்தார் மோரிஸ். காய்ந்துபோன பாதத்தைக் கண்ட வொய்ட்டின் மனைவி சிறிது பின் வாங்கினார்.

 

மகனின் கையிலிருந்த பாதத்தை வாங்கிப்பார்த்த வொய்ட் “இந்த காய்ந்துபோன பாதத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.

“இதற்கு ஒரு சாபம் இருக்கிறது. சாபமா வரமா என்று புரியவில்லை. சாபமென்றுதான் நினைக்கிறேன். ஒரு பெரிய சாமியார் இதனை சபித்துவிட்டார். ஒவ்வொருவருடைய வாழக்கையும் விதிப்படிதான் அமைகிறது. அமையவேண்டும். விதியை மீறி விதியுடன் விளையாட நினைத்தால் அது துயரத்தையே தரும் என்று அந்த சாமியார் உலகத்துக்கு சொல்ல விரும்பினார். அதற்காக இந்த பாதத்தை உருவாக்கியிருக்கிறார்.”

 

“அப்படி என்ன சாபம் அது?” ஹெர்பர்ட்டுக்கு ஆவலை அடக்கமுடியவில்லை.

“இந்தப் பாதம் மூன்று வரங்களை, மூன்றுபேர் கொண்ட குழுவுக்கு கொடுக்க வல்லது” – வொய்ட்.

“அப்படியென்றால், நீங்கள் ஏதாவது வரம் கேட்டீர்களா?. கிடைத்ததா?” – ஹெர்பர்ட்.

“கேட்டேன். கிடைத்தது.”

“மற்ற இருவருக்கும் கிடைத்த்தா?

“கிடைத்தது. ஆனால் அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் இதனை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். என் கைக்கு இது வந்துவிட்டது.” – வொய்ட்.

“உங்களுக்குதான் வரம் கிடைத்துவிட்டதே. இன்னும் ஏன் இதனை சுமக்கிறீர்கள்? இதனால் இனி உங்களுக்கு பயனேதும் இல்லையே?”  - ஹெர்பர்ட்.

“தெரியவில்லை. ஒரு நினைவுச்சின்னம் போல வைத்திருக்கிறேன்.” – வொய்ட்.

 

“உங்களுக்கு இன்னும் ஏதாவது வரம் கிடைத்தால் இப்பொழுது கேட்பீர்களா? – ஹெர்பர்ட்.

“எனக்குத் தெரியவில்லை.” சொல்லிக்கொண்டே திடீரென்று மோரிஸ் அந்தப் பாதத்தை நெருப்புத் தொட்டியில் தூக்கி எறிந்தார். நெருப்பிலிருந்து தீப்பற்றுமுன் அதனை எடுத்துவிட்டார் வொய்ட்.

 

“வேண்டாம். அதனை எறிந்துவிடுங்கள்.” மோரிஸ் இரைஞ்சலுடன் கூறினார்.

“உங்களுக்குத் தேவையில்லையென்றால் நான் எடுத்துக்கொள்கிறேனே.” – என்றார் வொய்ட்.

வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள். அதை நெருப்பில் எறிந்துவிடுங்கள். அதனால் வரும் விளைவுகள் கொடுமையாக இருக்கும். என் பேச்சைக் கேளுங்கள். எறிந்துவிடுங்கள்.’ கெஞ்சினார் மோரிஸ்.

வொய்ட் கேட்பதாக இல்லை. “எப்படி வரம் கேட்கவேண்டும்?” அந்தப் பாத்த்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டார். வொய்ட்.

“உங்கள் இஷ்டம். பிறகு என்னைத் திட்டாதீர்கள்.” – மோரிஸ்.

“சரி. எப்படி கேட்பது என்று சொல்லுங்கள்.” – வொய்ட்.

“உங்கள் வலது கையில் அந்தப் பாதத்தை வைத்துக்கொண்டு, அதனைப் பார்த்து, வாய்விட்டுக் கேட்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். விளைவுகள் விபரீதமாக இருக்கும்.” – மோரிஸ்.

“அரேபியக் கதைபோல இருக்கிறது.” சொல்லிக்கொண்டே திருமதி வொய்ட், இரவு உணவு பரிமாற எழுந்தார். “எனக்கு வேலை செய்ய இன்னும் இரண்டு கைகளைக் கேட்டால் நன்றாக இருக்கும்.” என்றாவாறே சென்றார்.

“கேட்பதைக் கொஞ்சம் உருப்படியாகத்தான் கேளேன். இருக்கும் மூளையை உபயோகப்படுத்து.” விளையாட்டாகக் கூறிய வொய்ட் குரங்குப் பாதத்தை தனது சட்டைப்பையில் பத்திரப்படுத்தினார். இரவு உணவு முடியும்வரை, கிட்டத்தட்ட அனைவரும் அந்தப் பாதத்தை மறந்துவிட்டார்கள். உணவு முடிந்ததும், தனக்கு இந்தியாவில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் மோரிஸ்.

 

“இவருடைய அனுபவங்கள், இந்தக் குரங்கின் பாதம்போல நம்புவதற்கு கடினமாக இருக்கிறது” விருந்தினரை வழியனுப்பிய பிறகு கூறினார் வொய்ட். “அவருடைய குரங்குப் பாதத்துக்கு பணம் ஏதாவது கொடுத்தீர்களா?” – திருமதி.வொய்ட்.

 

“கொடுத்தேன். வேண்டாமென்று திரும்பக்கொடுத்துவிட்டார்.” – பதிலளித்தார் வொய்ட்.

“நினைத்தேன். நாம் இனி பெரிய பணக்காரர்களாகிவிடலாம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். பெரிய ராஜா ஆகவேண்டும் என்று கேட்கலாம் அப்பா. அப்படி நீங்கள் ஆகிவிட்டால் அம்மாவுக்குப் பயப்படத் தேவையிருக்காது.” அம்மாவைப் பார்த்தபடி கூறினான் ஹெர்பர்ட்.

 

வொய்ட் பையிலிருந்த குரங்கின் பாத்த்தை வெளியில் எடுத்தார். “எனக்கு என்ன கேட்பதென்றே தெரியவில்லை. எனக்குத் தேவையான எல்லாம் எனக்கு இருக்கிறதே.” என்றார்.

 

“சரி. ஒரு இருநூறு பவுண்ட் பணம் கேட்டுப் பார்க்கலாம்.” யோசனை கூறினான் ஹெர்பர்ட். குரங்கின் பாதத்தை வலக்கையில் வைத்தபடி அதனை நோக்கி “எனக்கு இருநூறு பவுண்ட் பணம் வேண்டும்.”  பியானோவின் முன் அமர்ந்தபடி  உரக்கக் கூறினார் வொய்ட்.

 

அவர் கேட்டதும் பியானோ அதிர்ந்த ஒலி கேட்டது. அந்த ஒலியைக் கேட்டுத் திடுக்கிட்ட வொய்ட் ஆவென்று குரலெழுப்பினார். வொய்ட்டின் மனைவியும் மகனும் அவரை நோக்கி ஓடினார்கள். “நான் கேட்டதும் அந்தப் பாதம் நகர்ந்தது. என் கையை அது முறுக்கியதுபோல் இருந்தது. அதனால்தான் பயந்து கத்திவிட்டேன்.” வொய்ட் பதற்றமாகக் கூறினார்.

 

“பணத்தையும் காணோம். ஒன்றையும் காணோம்.” அந்தப் பாதத்தை எடுத்து மேஜை மீது வைத்தான் ஹெர்பர்ட். “பரவாயில்லை. சும்மா விளையாட்டுக்குக் கூறியிருக்கலாம்.” வொய்ட்டின் மனைவி சமாதானப்படுத்தினார். “அதனாலென்ன? நமக்கு எதுவும் தீங்கு நிகழவில்லையே. இருந்தாலும் எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.” வொய்ட் கூறினார்.

 

வொய்ட்டும், ஹெர்பர்ட்டும் நெருப்பின் முன் அமர்ந்து மீண்டும் குளிர்காய ஆரம்பித்தனர். வீட்டுக்குள் அமைதியாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியே காற்று பலமாக வீசிய ஒசை அந்தச் சூழலுக்கு ஒரு அச்சமான உணர்வை ஏற்படுத்தியது. “சரி. தூங்கப்போகலாம்.” என்றவாறு விளக்கை அமர்த்திவிட்டு தூங்கக் கிளம்பினார் வொய்ட்.

 

“ஒருவேளை உங்கள் படுக்கையில் இருநூறு பவுண்ட் பணம் இருந்து தொலைக்கப் போகிறது. நீங்கள் பணத்தை எடுக்கும் பொழுது பூதம் அலமாரியிலிருந்து உங்களை வேடிக்கைப் பார்க்கப்போகிறது.” கிண்டல் செய்தான் ஹெர்பர்ட்.

 

நெருப்பின் முன் தனியாக அமர்ந்திருந்தான் ஹெர்பர்ட். நெருப்பில் மனித முகங்கள் தெரிவதுபோல் கற்பனை செய்து பார்த்தான். கடைசியாக அவன் பார்த்த முகத்தைப்பார்த்து அவனுக்கே பயம் வந்துவிட்டது. அந்த முகம் மிகவும் தெளிவாகத் தெரிந்ததுபோல் இருந்தது. மேஜைமேல் இருந்த நீரை எடுத்து தீயை அணைத்தான் ஹெர்பர்ட். குரங்கின் பாதத்தை எடுத்து துடைத்து வைத்துவிட்டு உறங்கச் சென்றான் ஹெர்பர்ட்.

 

காலை உணவருந்திக்கொண்டிருந்த ஹெர்பர்ட், இரவு நெருப்பிலிருந்த முகத்தைக்கண்டு பயந்துபோனதை நினைத்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான். குளிர்காலமாக இருந்தாலும், காலை சூரியனின் கதிர்கள் பளீரென்று சமையலறையை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. வீட்டில் முதல் நாள் இரவு இருந்த இறுக்கமான சூழ்நிலை இல்லாதிருந்தது. அழுக்காக, சுருங்கிப்போயிருந்த குரங்கின் பாதம் பக்கத்தில் இருந்த மேஜை மேல் கிடந்தது. அதன்மீது நேற்று வீட்டினர் கொண்டிருந்த ஆர்வம் மதிப்பிழந்திருந்தது.

 

“அனைத்து வயதான ராணுவத்தினர்களும் வண்டி வண்டியாகக் கதைவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.” – திருமதி.வொய்ட்.

“முட்டாள்தனமாக நாமும் நம்பி அந்தக் கதையை வாய்மூடாமல் கெட்டுக்கொண்டிருந்தோமே. இந்தக் காலத்தில் வரமெல்லாம் கிடைக்கும் என்று நம்புபவர்களும் இருக்கிறார்களா, என்ன? அப்படியே இருந்தாலும் அதனால் என்ன தந்துவிட முடியும், அப்பா? என்றான் ஹெர்பர்ட்.

“பணம், வானத்திலிருந்து மோரிஸின் தலையில்தான் விழப்போகிறது.” கிண்டலாகக் கூறினான் ஹெர்பர்ட்.

“மோரிஸ், கேட்டதெல்லாம் சுலபமாகக் கிடைத்துவிடும் என்று கதைவிட்டாரே. தற்செயலாக அவருக்கு ஏதாவது கிடைத்திருக்கலாம். அதனால் அவர் அதை நம்பியிருக்கலாம்.” – வொய்ட்.

“பணம், கிணம் வந்தால் நான் திரும்பி வரும்வரை தொடாதீர்கள்.” சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்லத் தயாரானான் ஹெர்பர்ட். “பணம் கிடைத்தால், அது உங்களை மிகவும் மாற்றிவிடும் என்று நினைக்கிறேன். பேராசைக்காரராக மாறிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி மாறிவிட்டால் உங்களை நாங்கள் விலக்கி வைத்துவிடுவோம், அப்பா.” என்றான் ஹெர்பர்ட்.

 

தாயும் மகனும், வொய்ட்டுடைய கள்ளங்கபடமற்ற தன்மையை நினைத்து சிரித்துக்கொண்டார்கள். திருமதி.வொய்ட் மகனை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார். “ஹெர்பர்ட் வேலை முடிந்து வந்ததும், இன்னும் உங்களை கிண்டல் செய்யப்போகிறான்.” என்றவாறு சாப்பிட அமர்ந்தார் திருமதி.வொய்ட். குவளையில் குடிப்பதற்கு பானகத்தை ஊற்றிக்கொண்டிருந்த வொய்ட் “செய்யட்டும். செய்யட்டும். ஆனால், சத்தியமாகச் சொல்கிறேன்., நான் வரம் கேட்டபொழுது அந்தப் பாதம் நகர்ந்ததைப் பார்த்து பயந்துவிட்டேன், தெரியுமா?” என்றார்.

“நகர்ந்ததாகக் கற்பனை செய்யாதீர்கள்.” – மறுத்தார் மனைவி.

“இல்லையில்லை. உண்மையாக அது என் கையை முறுக்கியது. அப்பொழுது நான் . . . .    என்ன? .  .  . என்ன விஷயம்?” என்றார்.

 

வொய்ட்டின் மனைவி பதில் தராமல் வீட்டுக்கு வெளியே யாரோ இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கையில் ஏதோ காகிதத்தை வைத்துக்கொண்டு, வீட்டு எண்ணை மீண்டும் மீண்டும் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டு எண்ணை உறுதி செய்ததும் வெளியிலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு, கதவை நோக்கி அந்த மனிதர் வந்தார். அவர் கதவைத் தட்டுமுன் திருமதி.வொய்ட் கதவைத் திறந்து “என்ன விஷயம்?” என்றார்.

 

வந்தவர் ஏதோ தயங்குவதுபோல் தோன்றியது. “இது, திரு.வொய்ட்டின் வீடுதானே?” என்றார். “ஆமாம். நான் தான் திருமதி.வொய்ட்.”

“நான் ஹெர்பர்ட் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து வருகிறேன். உள்ளே வரலாமா?” என்றார் வந்தவர்.

“உள்ளே வாருங்கள். என்ன விஷயம்? ஹெர்பர்ட்டுக்கு ஏதாவது பிரச்சனையா? என்ன விஷயம்?” பதற்றப்பட்டார் திருமதி.வொய்ட்.

“நிறுத்து. பதறாதே. அம்மாக்களே இப்படித்தான். நீயே தீர்மானம் செய்துகொள்வதா? கொஞ்சம் அப்படி உட்கார்.” மனைவியை அதட்டிய வொய்ட் “நீங்கள் எதுவும் கெட்ட செய்தியைக் கொண்டுவரவில்லை என்று நினைக்கிறேன்.” வந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டார் வொய்ட்.

“மன்னிக்க வேண்டும். . . . “ வந்திருந்தவர் ஆரம்பித்தார்.

“”அவனுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லையே?” தாயாரால் பொறுக்கமுடியவில்லை.

வந்திருந்தவர் மெதுவாகக் கூறினார். “ ஹெர்பர்ட்டுக்கு மிகவும் மோசமாக அடிபட்டுவிட்டது. . . . . . ஆனால், அவருக்கு வலி தெரிந்திருக்க வாய்ப்பு இருந்ததுபோல் தெரியவில்லை.”

 

“ஆண்டவா. நன்றி. நன்றி.” இரு கரங்களையும் சேர்த்து வைத்தபடி இறைவனுக்கு நன்றி கூறினார் திருமதி.வொய்ட். அவருக்கு வலி தெரிந்திருக்க வாய்ப்பு இருந்ததுபோல் தெரியவில்லை. அப்படியென்றால்? செய்தியில் உள்ள உட்கருத்தை உணர்ந்த திருமதி.வொய்ட் இடிந்துபோனார். பூமி பிளந்து தன்னை விழுங்கிவிடாதா என்று எண்ணினார். அவருக்கு மூச்சே நின்றுவிட்டதுபோல் இருந்தது. நடுங்கியபடி கணவனின் தோளின் மீது கையை வைத்தார். அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

 

புதிய மனிதர் “இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டார்.” என்று மெதுவாகக் கூறினார். “இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டான். இயந்திரங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டான். ஆமாம். மாட்டிக்கொண்டான்.” பைத்தியம்போல் ஜன்னலை நோக்கி வெறித்தபடி மீண்டும் மீண்டும் கூறினார் வொய்ட். மனைவியின் இடது உள்ளங்கையை எடுத்து தனது இரு கைகளுக்கிடையில் அழுத்தியபடி கூறினார். நாற்பது வருடங்களுக்கு முன் கவலைப்படாதே என்பதற்கு அடையாளமாக அவர் அப்படி செய்வது வழக்கம்.

 

“எங்களுடைய ஒரெ சொத்து அவன் தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” வந்திருந்தவரைப்பார்த்து வருத்தத்துடன் கூறினார் வொய்ட். வந்திருந்தவர் “மன்னிக்கவும். நான் வெறும் தகவல் சொல்ல வந்திருக்கும் ஆள் மட்டும்தான். நிறுவனம் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக தங்களிடம் கூறுமாறு என்னை அனுப்பினார்கள். மன்னிக்கவும்.” என்றார்.

 

யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. வயதான தாயின் முகம் வெளிறிப்போனது. கண்கள் எங்கோ வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. சிலைபோல இருந்தார். வொய்ட் குரங்கின் பாதம் வேலை செய்யத் துவங்குவதை உணர ஆரம்பித்தார்.

 

“நிறுவனம் தான் இந்த விபத்துக்கு எந்தப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவதாகத் தகவல் அனுப்பியுள்ளது. இருந்தாலும் தங்களுடைய மகனின் உழைப்பைக் கருத்தில் கொண்டு சன்மானமாக ஒரு தொகையைக் கொடுப்பதாகக் கூறினார்கள்.” – வந்திருந்தவர்.

திரு.வொய்ட் மனைவியின் கையை விலக்கிவிட்டு எழுந்தார். உலர்ந்த உதடுகளை மெதுவாக விலக்கி “எவ்வளவு?” என்றார்.

“இரு நூறு பவுண்டுகள்.”

மனைவியின் கதறல் வொய்ட்டின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. ஒரு குருடனைப்போல் நடந்து சென்று வீட்டின் தரையில் விழுந்தார் வொய்ட்.

  

-  தொடரும்.

 

-மூலம் – w.w. ஜேக்கப் சிறுகதை.

 

துணுக்கு :

 

மனிதனைப்போல கரடிகளை உருவகம் செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

 
http://www.boredpanda.com/funny-bears-doing-human-things/

 

Thursday, March 20, 2014

சிறுகதை – 8 (ஆன்டன்.பி.செக்காவ்)



புரளி (நுணலும்.....)


செர்ஜ் அஹிநீவ் ஒரு பள்ளி ஆசிரியர். அவருடைய மகளுக்குத் திருமணம். வரலாறு போதிக்கும் ஒரு ஆசிரியர்தான் மணமகன். திருமணம் ஒரு பெரிய ஊர்த் திருவிழாபோல் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. சீருடை அணிந்த பரிமாறுபவர்கள், உதவியாளர்கள் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தனர். திருமண வீட்டில் இருந்த பெரிய அறையில் சீட்டாட்டம், நடனம், உரையாடல்கள் என்று மக்கள் ஆனந்தமாக இருந்தார்கள். வீடு முழுவதும் ஓயாத இரைச்சலாக இருந்தது. அஹிநீவ் பிரபலமான பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆசிரியர்கள் வருமானவரி கணக்கர்கள், ஆன்மீகவாதிகள் என்று பலதரப்பட்ட மனிதர்களை அங்கே காணமுடிந்தது. பெரிய மனிதர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் தூரத்தில் நின்றுகொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரவு உணவு தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளதென்று பார்த்துவர, அஹிநீவ் சமையலறைக்குச் சென்றார். சமையலறையில், உணவுகள் பசியை தூண்டுமளவுக்கு மணத்துக்கொண்டிருந்தது. நிற்பன, நடப்பன, பறப்பன, நீந்துவன என்று அனைத்து வகையான உணவுகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுக்கிணையாக சமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பருகுவதற்கான பானகங்கள், கொறிக்கும் உணவுகள் மேஜையை அலங்கரித்துக் கொண்டிருந்தன. தலைமை சமையல் நிபுணர் மார்ஃபா, சிவந்த நிறமும், உருளைபோன்று குண்டான உடலமைப்பும் கொண்டிருந்தார். அங்கேயும் இங்கேயும் சுறுசுறுப்பாக நடந்து எல்லோரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்.  

சமையலறைக்குள் நுழைந்த அஹிநீவ் “ஆஹா. மணம் ஊரையே தூக்குது. வாசனை முகர்ந்ததும் எனக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டது. ஸ்டர்ஜன் ரெடியாகிவிட்டதா மார்ஃபா? ருசி எப்படி இருக்கிறது என்று நான் பார்க்கலாமா?” அஹிநீவுக்கு ஸ்டர்ஜன் என்றால் உயிர். ஸ்டர்ஜன் என்பது மீனில் தயாரிக்கப்படும் ஒருவகை உணவு. “ரெடியாக உள்ளது.” என்று கூறிய மார்ஃபா ஸ்டர்ஜன் சமைத்திருந்த பாத்திரத்தில் இருந்து, மிகவும் கவனமாக சிறிதளவு ஸ்டர்ஜனை எடுத்து ஒரு தட்டில் வைத்து அஹிநீவிடம் நீட்டினார். அவள் கொடுத்தது ஒரு வாயளவு மட்டுமே இருந்தது. மிகுந்த விருப்பத்துடன், ஒரு குழந்தையைப்போல அஹிநீவ் அதனை ருசிபார்த்தார். “ஆஹா. இதற்கு நான் என் உயிரையே தருவேன்.” என்று உதடுகளால் சத்தமாக சப்புகொட்டினார்.

சமையலறையின் உள்ளே ஸ்டோரில் இருந்த மார்ஃபாவின் உதவியாளர் வான்கின்-க்கு சப்புகொட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. அவர் ஸ்டோரில் இருந்து வெளியே தலையை எட்டிப்பார்த்தபொழுது அஹிநீவின் பின்புறம் தெரிந்தது. மார்ஃபா அஹிநீவின் முன்னே நிற்பதும் தெரிந்தது.

“யார் அங்கே எங்களுடைய மார்ஃபாவை முத்தமிடுவது?” என்று விளையாட்டாக கேட்டபடியே வான்கின் வெளியே வந்தான். வந்தவுடன் அஹிநீவைப் பார்த்து “நீங்களா சார், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் திருமண பெண்ணின் தந்தைபோல் இல்லை. நன்றாக இளமையுடன் இருக்கிறீர்கள் என்று கண்ணடித்தவாறே கூறினான்.

“நான் ஒன்றும் முத்தமிடவில்லை. மீன் ருசியாக இருந்ததால் சப்புகொட்டி சாப்பிட்டேன் அவ்வளவுதான்.” கலவரத்துடன் கூறினார் அஹிநீவ்.
“பரவாயில்லை. பரவாயில்லை. எல்லோரும் மனிதர்கள்தானே. விடுங்க சார்.” வான்கின் சிரித்துக்கொண்டே மீண்டும் ஸ்டோருக்குள் சென்றுவிட்டார்.
அஹிநீவ் வெட்கத்தால் முகம் சிவந்தார். “ஐயோ. இந்த மடையன் நான் மார்ஃபாவை முத்தமிட்டதாக ஊர் முழுவதும் சொல்லிவிட்டால் என் கௌரவம் என்னாவது? மானத்தை வாங்கிவிடுவான் போலிருக்கிறதே என்று அஹிநீவ் யோசித்தார்.

வான் கின் ஸ்டோரிலிருந்து வெளியே சென்று ஏதோ வேலையை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தான். வரும் வழியில் திருமணத்துக்கு வந்திருந்த ஒரு போலிஸ் ஆஃபிசருடைய மனைவியிடம் பேசிக்கொண்டிருப்பதை அஹிநீவ் கவனித்தார். போலிஸ் ஆஃபிசருடைய மனைவியும் கலகலவென்று சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

என்னைப்பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். அடப்பாவி! இவனை என்ன செய்தால் தகும்? அவளும் வெட்கமில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்துக்காக இப்படி சிரித்துக்கொண்டிருக்கிறாளே. இதனை சும்மா விடக்கூடாது. விட்டால் ஊர் முழுவதும் வதந்தி பரவிவிடும் என்று தனக்குள் கூறிக்கொண்டார்.

சிந்தனையில் தலையை சொறிந்துகொண்டே நின்றுகொண்டிருந்தார் அஹிநீவ். ஏதோ தீர்வு கிடைத்ததுபோல ஃப்ரெஞ்ச் ஆசிரியர் இருந்த திக்கை நோக்கி சென்று அவரிடம் சாதாரணமாக உரையாடலைத் துவங்கினார். “ராத்திரி சாப்பாடு ரெடியாயிட்டான்னு கிச்சனுக்கு போய் பார்த்தேன். எல்லாம் கிட்டத்தட்ட தயாராயிட்டு. ஸ்டர்ஜன் மீன்கறி முடிஞ்சிருந்தது. உங்களுக்குதான் தெரியுமே மீனுன்னா எனக்கு உயிர்னு. சரின்னு கொஞ்சம் ருசி பார்த்தேன். பிரமாதமாயிருந்தது. நல்லா சப்புகொட்டி சாப்பிட்டேன். பக்கத்துல மார்ஃபா நின்னுட்டிருந்தாள். ஸ்டோர்ல இருந்த வான்கின் நான் சப்பு கொட்டுற சத்தத்த கேட்டுட்டு, என்னா சார் மார்ஃபாக்கு முத்தம் கொடுத்தீங்களான்னு கேட்கிறான்.. மடையன், மார்ஃபாக்கு முத்தம் கொடுக்கிற வயசா எனக்கு?” என்றார்.

“என்ன... யாருக்கு கிஸ் பண்ற வயசுன்னு சந்தேகம் இங்க?” அரைகுறையாக கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் கணித ஆசிரியர்.

“அது இல்ல சார். வான்கின் இருக்கான்ல. நான் கிச்சனுக்கு போனேனா? ... “ என்று அஹிநீவ் மீண்டும் தொடர்ந்தார். “போயும் போயும் மார்ஃபாவைக்கு முத்தம் கொடுக்கிறதுக்கு ஒரு கழுதைக்கு நான் முத்தம் கொடுப்பேனாக்கும்” என்று சேர்த்துக்கொண்டார். சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தபொழுது ஒரு நாலைந்து பேர் கேட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவர்களைப் பார்த்ததும் “ அதெல்லாம் இல்ல சார். என் பக்கத்துல மார்ஃபா இருந்தத பாத்துட்டு, நான் கிஸ் பண்ணிட்டேன், மிஸ் பண்ணிட்டேன்னு இந்த வான்கின் சொல்லிட்டு திரியிறான். மடையன். இந்த வயசுல இந்த வேலையை நான் செய்வேனா, நீங்களே சொல்லுங்க? இப்படிகூட ஒருத்தன் சொல்றான்னு ஆச்சர்யமால்ல இருக்கு.” என்றார்.

“ஜீஸஸை விட அப்படி என்ன ஆச்சர்யமான விஷயம்? “ பாதிரியார் அஹிநீவிடம் கேட்டபடியே அங்கு வந்தார். “நான் கிச்சன்ல மீனை டேஸ்ட் பண்ணிட்டிருக்கும்போது இந்த வான்கின் ....”

அரைமணி நேரத்துக்குள் திருமணத்துக்கு வந்திருந்தவர்களில் அநேகமாக அனைவருக்கும் அஹிநீவ், மீன் கறி, மார்ஃபா விவகாரம் தெரிந்துவிட்டது.

இப்ப அந்த நாயி சொல்லட்டும். அவன் வாயைத் தொறந்தா எல்லாரும், - உளறாத எங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியும்னு சொல்லி வாயை அடைச்சுடுவாங்கல்ல என்று அஹிநீவ் நினைத்துக்கொண்டார். ஒரு வழியாக நிம்மதியடைந்த அஹிநீவ், கிட்டத்தட்ட நாலு பெக் வோட்காவை உள்ளே தள்ளிவிட்டார். அதனால், இரண்டு மூன்றுபேர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அவரை தூங்கவைக்க வேண்டியதாயிற்று. ஒரு குழந்தையைப்போல நிம்மதியாக அன்றிரவு அவர் உறங்கினார். மனிதன் ஒன்று நினைக்க, நடப்பது வேறொன்றாகிவிடுகிறது. உலகிலேயே கொடுமையான ஆயுதம் நாக்குதான்.

அஹிநீவ் நினைத்ததற்கு எதிராக எல்லாம் தாறுமாறாக நடந்தது. ஒரு வாரம் கழித்து அவர் வேலை செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அஹிநீவைத் தனது அறைக்கு அழைத்தார்.
“இங்க பாருங்க அஹிநீவ், சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ஊருக்குள்ள நீங்க மார்ஃபா கூட தொடர்பு வைச்சிருகீங்கன்னு ஒரே புரளியா கிடக்கு. நீங்க யார் கூட வேணும்னாலும் தொடர்பு வைச்சுக்குங்க. அது உங்களோட சொந்த விஷயம். ஆனால் அதனால பள்ளிக்கூடத்துக்கு எதுவும் கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துடாதீங்க. கண்டிப்பா சொல்லிட்டேன்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அஹிநீவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் கொட்டியதுபோல இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். வீட்டில் பிரளயம் காத்திருப்பது அவருக்குத் தெரியாது.

அவர் வீட்டுக்கு வந்ததும் அவர் மனைவி அவரிடம் பேசவில்லை. இரவு உணவு உண்ணும்பொழுது “ஏன் சாப்பாட்டை போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். நான் சமைத்தால் நன்றாக இல்லையா? மார்ஃபா சமைத்தால்தான் ருசியாக உள்ளதா?” என்று கோபமாகக் கூறினார்.
அஹிநீவ் தனக்கு நேரம் சரியில்லை என்று நினைத்துக்கொண்டார். “சரி எனக்கு இப்பொழுதாவது தெரிந்ததே. உங்களுடன் குடும்பம் நடத்தியதற்கு எனக்கு நல்ல தண்டனை.” என்று அவரது மனைவு குரலெடுத்து அழ ஆரம்பித்தார்.

உணவைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்த அஹிநீவ், உடையைக் கூட மாற்றாமல், உடனடியாக வான்கின்-உடைய வீட்டுக்கு சென்றார். வான்கின் அப்பொழுது வீட்டில் இருந்தார். அஹிநீவ் “அடப்பாவி. உனக்கு நான் என்ன துரோகம் செய்தேன். ஊர் முழுக்க எனக்கு இப்படி அவப்பெயர் வாங்கிக் கொடுத்திட்டியே” என்று வான்கின்-ஐத் திட்டினார்.
“அவப்பெயரா? என்ன சொல்றீங்க?” – வான்கின்
“மார்ஃபாக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு யார் புரளியைக் கிளப்புனது? உன்னைத் தவிர வேற யாரும் இல்லை. எங்கே, நீ இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்?” – அஹிநீவ்.
“அப்படி நான் சொல்லியிருந்தால் என் வாய் புழுபுழுத்து போகட்டும் சார். என்ன சார் இப்படி அநியாயத்துக்கு பழி சொல்றீங்க. சும்மா கிண்டலுக்குதான் உங்ககிட்ட நான் சொன்னேன். வேற யார்கிட்டேயும் சத்தியமா நான் சொல்லலை. தெரியுமா?” வான்கின் தான் வதந்தியைப் பரப்பவில்லை என்று உறுதியாகக் கூறினான்.

அப்படின்னா வேற யாரு சொல்லியிருப்பாங்க என்று தனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தார் அஹிநீவ். நுணலும் தன் வாயால் கெடும். என்ன செய்வது?



(மூலம் : ஆன்டன்.பி.செக்காவ்)


ஒரு காணொளி :

வாழ்க்கையில் தினம்தினம் அதிசயங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=E3w3OqidqSk



தமிழ் சொற்பொழிவு:

தமிழ் நாட்டில் இவர் எவ்வளவு பிரபலம் என்று எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பிடித்த சொற்பொழிவாளர் திரு.கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகள் நிறைய யூ ட்யூப்-ல் உள்ளன. சிட்னியில் அவரது சொற்பொழிவை நேரடியாக கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் அவரைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

இதனைக் கேட்டுப்பாருங்கள். பிடித்திருந்தால் அன்னாரது அனைத்து சொற்பொழிவுகளையும் தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.





Thursday, March 13, 2014

சிறுகதை – 7 (ரபீந்ரநாத் தாகூர்)



காபூலிவாலா (ஊரார் பிள்ளை.)

என் ஐந்து வயது மகள் மினி-க்கு சிறிது நேரம் பேசாமல் இருப்பதென்பது இயலாத காரியம். தூங்கும் நேரம் தவிர, அவளுக்கு வாய் ஓய்ந்து நான் பார்த்ததே கிடையாது. அவளது அம்மாவுக்கும், மினிக்கு பதில் சொல்லி மாளாது. மினி மௌனமாக இருப்பதென்பது இயற்கைக்கு மாறான விஷயம். அவள் மௌனமாக இருந்தாலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கும் அவளுக்குமான உரையாடல்களில் சுவாரஸ்யத்துக்கு எப்பொழுதும் குறைவேயிருக்காது.

ஒருநாள் காலை என்னுடைய நாவலின் பதினேழாவது அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தேன். மினி அறைக்கு ஓடிவந்து “அப்பா... அப்பா, இந்த செக்யூரிட்டி காக்காவை காகான்னு சொல்றாரு. தப்புதானே? அவருக்கு ஒண்ணுமே தெரியலைப்பா. பாவம்.” என்றாள். அவளுக்கு நான் பதில் தருமுன்னே வேறு விஷயத்துக்குத் தாவிவிட்டாள். “அப்பா. ‘போலோ’ மேகத்துக்குள்ள நிறைய யானைங்க இருக்கும். அதெல்லாம் தும்பிக்கையால தண்ணிய வெளிய துப்பும். அப்பதான் மழைவரும்னு சொல்றான். அப்படியா?” என்று முடித்துவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றாள். “அப்பா. அம்மா உனக்கு என்ன வேணும்?” என்றாள். நான் “மினிக்குட்டி. அப்பாவுக்கு நிறைய வேலையிருக்கு. சமத்தா வெளில போயி போலோவோட விளையாடு.” என்றேன்.

என்னுடைய அறையில் இருந்த ஜன்னல் தெருவைப் பார்த்தவாக்கில் அமைந்திருந்தது.  கால்களால் தாளமிட்டபடி மினி என் அருகில் அமர்ந்திருந்தாள்.

பதினேழாவது அத்தியாயத்தில் கதாநாயகி தப்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். மினி திடீரென்று ஜன்னலை நோக்கி ஓடினாள். “அப்பா, கபூலிவாலா, கபூலிவாலா” என்று கூவினாள். தெருவில் ஒரு கபூலிவாலா மெதுவாக நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. அழுக்கான உடைகள் மற்றும் உயரமான டர்பனும் அணிந்து பெரிய மூட்டையை முதுகில் சுமந்தபடி கபூலிவாலா சென்றுகொண்டிருந்தான். கைகளில் திராட்சை பழப்பெட்டிகளையும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

கபூலிவாலாவைப்பற்றி என்ன நினைத்தாளோ தெரியவில்லை. கபூலிவாலா என்று சத்தமாகக் கூப்பிட்டாள். குரலைக்கேட்ட எவனும் எங்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தான். அவன் வருவதைக்கண்ட மினி, ஓடிப்போய் அம்மாவின் பின்னால் மறைந்துகொண்டாள். அவளுக்கு கபூலிவாலா, அவன் சுமந்து வரும் மூட்டையில் அவளைப்போன்ற குழந்தைகளைக் கட்டி வைத்திருக்கிறான் என்ற பயம் உண்டு. சிரித்த முகத்துடன் கபூலிவாலா எங்கள் வாசல்வரை வந்துவிட்டான்.

வாசல்வரை வந்தவனை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாது நானும் கொஞ்சம் நாட்டு நடப்பைப் பேசிவிட்டு திராட்சைப்பழங்களும் வாங்கினேன். கபூலிவாலா கிளம்புமுன் “அந்தக் குட்டிப்பாப்பா எங்க சார்?” என்றான். மினிக்கு அவனை நேராகப்பார்த்தால் பயம் தெளியும் என்றெண்ணி நானும் அவளை அழைத்து வந்தேன். கபூலிவாலா அவளுக்கு சிறிது பாதாமும், உலர்ந்த திராட்சைகளையும் கொடுத்தான். அப்படி அவன் கொடுத்தது மினிக்கு, அவளுடைய சந்தேகத்தை அதிகமாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். அதனை வாங்காமல் என்னை அவள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.
அதுதான் அவர்களது முதல் சந்திப்பு.

அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சில நாட்கள் கழித்து ஒருநாள் காலை வெளியில் செல்லப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். வீட்டின் முன்புறம் கதவுக்குப் பக்கத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து மினி யாரிடமோ சிரித்துப் பேசிக்கொண்டிப்பது தெரிந்தது. வெளியில் வந்து பார்த்தபொழுது பெஞ்சுக்கருகில் கபூலிவாலா தரையில் அமர்ந்திருந்தான். மினி அவனிடம் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது கைகளில் பாதாமும், உலர்ந்த திராட்சைகளும் இருந்தன. நான் கபூலிவாலாவிடம் “உன்னை யார் அவளுக்கு கொடுக்கச் சொன்னது?” என்று கோபித்துவிட்டு அவனிடம் எட்டணா நாணயத்தைக் கொடுத்தேன். அவனும் மறுக்காமல் பெற்றுக்கொண்டான்.

மாலை வீட்டுக்குத் திரும்பியபொழுது, அந்தப் பாழாய்போன எட்டணா, அதன் மதிப்பைவிட அதிகமான பிரச்சனைகளை உண்டுபண்ணியிருந்தது. மினியின் கையில் எட்டணா நாணயத்தைப் பார்த்த அவளுடைய அம்மா, எனக்கு ஏது காசு என்று கேட்டிருக்கிறாள். மினி சந்தோஷமாக கபூலிவாலா கொடுத்தான் என்று கூறியிருக்கிறாள். “கபூலிவாலாவா கொடுத்தான்?” அம்மாவுக்கோ அதிர்ச்சி. “மினி அவங்க எல்லாம் காசு கொடுத்தா, நீ ஏன் வாங்குற?” என்று அம்மா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது நான் வீட்டுக்குள் நுழைந்தேன். என் பங்குக்கு நானும் விசாரணையை ஆரம்பித்தேன். முதல்நாள் சந்திப்பில் திராட்சை பெற்ற பிறகு, மினியும் கபூலிவாலாவும் நல்ல நண்பர்களாகிவிட்டனர் என்று அப்பொழுதுதான் தெரிந்தது. மினிக்கு கபூலிவாலாவிடம் இருந்த பயமும் விலகியிருந்தது.

அவர்கள் இருவருக்குமிடையில் நல்ல நட்பு இருந்தது. அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதும் வேடிக்கையாக இருக்கும். “கபூலிவாலா, உன் மூட்டையில என்னா இருக்கு?” “ஒரு யானைக்குட்டி இருக்கும்மா.” என்பது போல விளையாட்டாக இருக்கும். கபூலிவாலாவும் அவனுடைய பங்குக்கு “குட்டிப்பாப்பா நீ எப்ப மாமியார் வீட்டுக்கு போகப்போற?” என்பான். மினிக்கு அதற்கு அர்த்தம் தெரியும் வயது கிடையாது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாது “நீங்க எப்ப போகப்போறீங்க?” என்று மறுகேள்வி வைப்பாள். மாமியார் வீடு என்பதற்கு சிறைவாசம் என்ற பொருளும் உள்ளதால், கபூலிவாலா “நான் மாமியார் வீட்டை உடைத்து எறிந்துவிடுவேன்.” என்று வேடிக்கையாக பதில் தருவான். அர்த்தம் தெரியாவிட்டாலும், மினியும் இந்த பதிலுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாள்.

மினியின் அம்மா ரொம்ப பயந்த சுபாவம். தெருவில் ஒரு சத்தமும் கேட்டுவிடக்கூடாது. சத்தம் கேட்டுவிட்டால்போதும், உடனே திருடன் வருகிறான், குடிகாரன் வருகிறான் என்று ஏகப்பட்ட சந்தேகம் வந்து கதவை அடைத்துவிடுவாள். கரப்பான் பூச்சி, தத்துக்கிளி, மலேரியா, பிரிட்டிஷ் மக்கள் என்று எதனைக்கண்டாலும் பயம். பயம்,பயம் பயமோ பயம். இத்தனை வயதிலும் பயம் குறைந்தபாடில்லை. அவளுக்கு எப்பொழுதுமே, கபூலிவாலா மீது அதிக சந்தேகம் இருந்தது. அந்த ஆசாமியிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவாள்.

எனக்கு அவளுடைய பயத்தைக்கண்டு சிரிப்புதான் வரும். சும்மா எதெற்கெடுத்தாலும் பயந்து சாகாதே என்பேன். “அவன் புள்ளயத்தூக்கிட்டு போயிட்டா என்ன செய்வது? காபூலில் புள்ளங்கள கொத்தடிமையா வச்சிருப்பாங்களாம் தெரியுமா? என்பது போன்ற கேள்விகளால் என் வாயை அடைக்கப்பார்ப்பாள். எனக்கு அவளது பயங்கள் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும்.

அப்படி எதுவும் நடக்காது, நடக்க சாத்தியமுமில்லை என்று மறுத்துக்கூறுவேன். ஆனால் அது அவளுடைய எண்ணத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நேரத்தில் மினிக்கும் கபூலிவாலாவுக்குமிடையே இருந்த கள்ளங்கபடமற்ற நட்பு தொடர்ந்தது. அவர்களது நட்புக்கு மினியின் அம்மாவுடைய எதிர்ப்பு எந்தத் தடையையும் போடவில்லை.

ஒவ்வொரு ஜனவரியும், கபூலிவாலா ரஹ்மான், தன்னுடைய சொந்த நாட்டுக்கு பிரயாணம் மேற்கொள்வான். அதற்கு முந்தைய நாட்களில் கொஞ்சம்கூட நேரமில்லாமல் வேலை செய்வான். அப்பொழுது, பணம் வாங்காமல் பொருளை விற்ற வீடுகளில், அவன் பணத்தை வசூல் செய்தாகவேண்டியிருக்கும். எவ்வளவுதான் நேரமில்லாமல் இருந்தாலும், தினம் ஒரு முறையாவது, மினியைப்பார்க்க தவறாமல் வந்துவிடுவான். காலையில் வராவிட்டால், மாலையில் வந்துவிடுவான். எனக்கே இது ஆச்சர்யமாக இருந்தது. அவன் வந்துவிட்டால், கபூலிவாலா, கபூலிவாலா என்று மின்னியும் சிட்டாகப் பறந்துவிடுவாள்.

ஒருநாள் காலையில், எனது அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். தெருவில் ஏகப்பட்ட கூச்சல் கேட்டது. வெளியில் சென்று என்னவென்று எட்டிப்பார்த்தேன். ரஹ்மானை இரண்டு போலிசார் கைகளைக்கட்டி கூட்டிச் செல்வது தெரிந்தது. ரஹ்மானின் உடையில் ரத்தக்கறை இருந்தது. அப்பொழுது வாசலுக்கு வந்த மினி “கபூலிவாலா, கபூலிவாலா, மாமியார் வீட்டுக்கு எப்ப போறீங்க?” என்றாள். ரஹ்மான் புன்முறுவலுடன் “அங்குதான் போயிட்டிடுக்கேன் குட்டிப்பாப்பா” என்றபடி போலீசாருடன் சென்றவண்ணமிருந்தான். அந்த பதில் மினியைத் திருப்திபடுத்தவில்லை என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. அதனைக்கண்ட ரஹ்மான், “மாமியார் வீட்டெல்லாம் ஒடைச்செறிஞ்சுடுவேன் பாப்பா. ஆனால் இப்ப கையைக் கட்டி வச்சிட்டாங்களே?” என்றவாறு நடையைத் தொடர்ந்தான்.

விசாரித்துப்பார்த்ததில், ரஹ்மானுக்கு ராம்பூரி ஷாவல் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டானென்று தெரிந்தது. பொருட்களையே வாங்கவில்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்லிவிட்டானாம். பிரச்சனை பெரிதாகி ரஹ்மான், ராம்பூரியைக் கத்தியால் குத்திவிட்டதாகத் கூறினார்கள். ரஹ்மானுக்கு சில வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. ரஹ்மானைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். மினியும் மறந்துவிட்டாள் என்று கூற எனக்கு வெட்கமாகக்கூட இருக்கிறது. அவளுக்குப் புதுத்தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அவள் முன்புபோல என் அறைக்கு வருவதும் குறைந்துவிட்டது. அவள் என்முன் நின்று பேசுவதே அரிதாகிவிட்டது.

பலவருடங்கள் கழித்து ஒரு பண்டிகைகால விடுமுறையின்பொழுது மினியின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. எங்கள் வீட்டு இளவரசி, புதுவீட்டுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். மழைக்குப் பிறகு வந்த சூரிய வெளிச்சம் கண்களைப் பறித்தது. இன்றிரவுக்கு பிறகு எங்கள் மினி எங்களைப் பிரிந்து கணவன் வீட்டுக்கு சென்றுவிடுவாள் என்ற எண்ணம், மனதைக் கனமாக்கியது.

வீட்டுக்கு முன் பந்தல் கட்டியிருந்தார்கள். விருந்தினர்கள் வருவதும் போவதுமாக வீடு கல்யாணக்களை கட்டியிருந்தது. நான் கல்யாணச்செலவுகளை குறித்துக்கொண்டிருந்தேன். வாசலில் நுழைந்து யாரோ காத்திருப்பதுபோல் தோன்றியது. அவரது உடைகளைப் பார்த்தால் கல்யாணத்துக்கு வந்தவர்போலத் தெரியவில்லை. உற்றுப்பார்த்த பிறகுதான் அது ரஹ்மான் என்று தெரிந்தது. முகத்தில் முன்பிருந்த மலர்ச்சியில்லை. முதுகில் எப்பொழுதும் சுமந்துவரும் மூட்டையுமில்லை.

“வா ரஹ்மான் எப்ப வந்த?” விசாரித்தேன்
“நேத்து காலைல,   ஜெயில்லேந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க.”
அந்த வார்த்தைகள் என் மனதைத் தாக்கின. ரஹ்மான் சிறைக்கு சென்றபின் அவனைப்பற்றி நாங்கள் நினைத்ததுகூடக் கிடையாது. இந்த ஆள் இங்கு வராமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
“வீட்டுல விசேஷம். ரொம்ப பிஸியா இருக்கோம். இன்னொரு நாள் வாயேன். பார்க்கலாம்.” எப்படியாவது வெளியேற்ற முயற்சித்தேன்.

ஒரு வினாடி திரும்பிவிட எத்தனித்தான். ஏதோ தயங்கியது போலத் தெரிந்தது. “குட்டிப் பாப்பாவ ஒரு நிமிஷம் பாத்துட்டுப் போகட்டுமா சார்?” மினி இன்னும் சின்னப் பெண்ணாகவே இருப்பாள் என்று நினைத்திருக்கிறான். கபூலிவாலா என்று கத்தியபடி ஓடி வருவாள் என்ற நினைப்புடன் கேட்கிறான்.
“வீட்டுல விசேஷம் நடந்துகிட்டிருக்கு. இப்ப யாரையும் பாக்கமுடியாது.” என்றேன்.
ரஹ்மான் வருத்ததுடன் தலையைக் குனிந்துகொண்டான். “வர்றேன் சார்.” சென்றுவிட்டான். அவனுக்காக நான் வருந்தினேன். கூப்பிடலாமா என்று யோசித்தேன். அவன் தானாகவே திரும்பி வருவது தெரிந்தது. “ பாப்பாவுக்காக இதெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன். எனக்காக பாப்பாக்கிட்ட இதக் கொடுத்துடறீங்களா?” ஒரு பேப்பரில் கொஞ்சம் பாதாம் பருப்புகளையும், உலர்ந்த திராட்சைகளையும் பக்குவமாக மடித்து வைத்திருப்பது தெரிந்தது. அவனுடைய நண்பர்கள் யாரிடமோ வாங்கியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

நான் பொருட்களுக்கான பணத்தைக் கொடுப்பதற்காக, பணத்தை எடுக்க பர்ஸைத் திறந்தேன். “வேண்டாம் சார். நீங்க ரொம்ப நல்லவங்க. என்னை இவ்வளவு நாள் கழிச்சும் ஞாபகம் வச்சிருக்கீங்க. உங்களுக்கு மினி இருக்கிறாப்போல எனக்கும் ஒரு பொண்ணு ஊர்ல இருக்கு சார். மினிய பாக்குறப்பல்லாம் எனக்கு என் பொண்ண பாக்குறாமாதிரி இருக்கு சார். வருமானத்துக்காக நான் இதெல்லாம் மினிக்கு எடுத்துட்டு வரல சார்.” என்றான்.

பேசிக்கொண்டே தனது சட்டைப்பைக்குள் இருந்து ஒரு சிறிய பையை எடுத்து அதிலிருந்து அழுக்குபடிந்து மக்கிய ஒரு காகிதத்தை எடுத்தான். மிகவும் கவனமாக அதனைப்பிரித்து, விரல்களால் மடிப்புகளை நீவி முத்தமிட்டுவிட்டு என்னிடம் காண்பித்தான். அது மூன்று நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தையின் கைகளின் பதிவாக இருந்தது. குழந்தையின் கைகளில் மையைத் தடவி பதிய வைத்துபோல் இருந்தது. ரேகைகளும் சரியாகப் பதியப்படாமல் கைகளால் அப்பியதுபோல் காணப்பட்டது. ஒரு போட்டோ கூடக் கிடையாது. ஒரு ஓவியமாகவும் இல்லை. கல்கத்தாவுக்கு வந்ததுமுதல் மகளின் பிஞ்சுக்கரங்களின் நினைவுகளை ரேகைகளாக காகிதத்தின் வாயிலாக இதயத்தில் சுமந்திருக்கிறான்.


அதனைக்கண்டதும் எனது கண்கள் பனித்தன. நான் அவனைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவனாகிவிட்டேன். அவனும் என்னைப்போலவே ஒரு தந்தை. அவனது குழந்தையின் கைத்தடங்கள் எனக்கு எனது மினியின் குழந்தைப்பருவ ஞாபகங்களைத் தூண்டிவிட்டது. உடனே மினியைக் கூட்டிவரச்சொல்லி ஆளனுப்பினேன். அதற்கும் பிரச்சனைகள் வந்தன. அனைத்தையும் விலக்கிவிட்டேன். உடனே அவளை வரச்சொன்னேன். செந்நிற பட்டுச்சேலை அணிந்து, மஞ்சளுடன் வெட்கம் கலந்த முகத்துடன் மினி எங்கள் எதிரே வந்தாள். அவளைக் கண்டதும் ரஹ்மானுக்கு தூக்கிவாரிப்போட்டது. யுவதியாக வந்த மினியை அவன் எதிர்பார்க்கவில்லை. சமாளித்துக்கொண்டான். “குட்டிப்பொண்ணு மாமியார் வீட்டுக்கு போகப்போறீங்களா?” என்று கேட்டான்.

இப்பொழுது அதன் அர்த்தம் புரிந்ததால், மினி வெட்கத்துடன் தலை குனிந்தாள். முதன்முதல் அவர்கள் சந்தித்தது என் நினைவுக்கு வந்தது. ரஹ்மானைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. மினி சென்றவுடன் ரஹ்மான் வருத்ததுடன் தரையில் அமர்ந்தான். மினியை பார்த்ததும், தன் மகளும் அப்படித்தான் வளர்ந்திருப்பாள் என்று நினைத்திருக்கக்கூடும். எட்டு வருடங்களில் ஏகப்பட்டதை இழந்துவிட்டான். காலம் அனைத்தையும் மாற்றிவிட்டது.

வீட்டில் மங்களவாத்தியங்களின் ஒலி கேட்டது. ரஹ்மான் வெறிச்சோடி அமர்ந்திருந்தான். என்னிடமிருந்த பணத்தில் குறிப்பிடத்தக்க அளவு எடுத்து ரஹ்மானிடம் கொடுத்தேன். அவன் வாங்க மறுத்தான் “சீக்கிரம் உன் மகளிடம் செல். உங்களுடைய மகிழ்ச்சி என் மகளுக்கு ஆசிர்வாதமாகட்டும்” என்று அவனிடம் அதை வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டேன். மினியும் தன் சார்பாக இரண்டு வளையல்களை ரஹ்மானுடைய மகளுக்குக் கொடுத்தாள். ரஹ்மானுக்கு இந்தத் தொகையைக் கொடுத்ததால் கல்யாணத்தில் சில நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்தாகவேண்டும். வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்ய முடியாது. பேண்டு வாத்தியங்களை ரத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்மணிகளுக்கு கொஞ்சம் ஆதங்கம்தான். ஆனால் எனக்கு, பிரிந்த மகளைப் பார்க்கும் ஒரு தந்தையின் மகிழ்ச்சி, என் குழந்தையை ஆசிர்வதிக்கும் என்ற திருப்தி இருந்தது. அதுபோதும்.

(மூலம் : ரபீந்ரநாத் தாகூர்)

இந்தக் கதையை ஹிந்தித் திரைப்படமாக இங்கே காணலாம்.

http://www.youtube.com/watch?v=-3ZIcLOYmRw